இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா, ஏடன் வளைகுடாவில் ட்ரோன் தாக்குதலுக்குட்ட கப்பலில் இருந்து 21 பணியாளர்களை இந்திய கடற்படை மீட்டது.
ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. 3 மாலுமிகள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்துள்ளனர்.
ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் இருந்து 54 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையே தாக்கப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 21 பேரை, ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு கப்பலில் உள்ள மருத்துவ குழுவினர் முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிபூட்டி நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடன் வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் கொல்கத்தா, மாலை 4.45 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து, அதன் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் மற்றும் படகுகளைப் பயன்படுத்தி ஒரு இந்தியர் உட்பட 21 பணியாளர்களை உயிரை பணயம் வைத்து மீட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.
ஏடன் வளைகுடாவில் நடந்த கடல் சம்பவத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் விரைவாக பதிலடி கொடுத்ததாக மத்வால் கூறினார்.
கடந்த சில வாரங்களில், மேற்கு இந்தியப் பெருங்கடலில் பல வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை பல்வேறு கட்டங்களில் உதவி செய்து, பல பேர்களை மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.