தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், மகளிர் மேம்பாட்டுக்கு, பெரியவர்கள் நல்வாழ்வுக்கு என அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் தங்கர் பச்சானுக்கு ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
தங்கர் பச்சான், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதனை மிகவும் நேர்மையாக, தைரியமாக வெளிப்படுத்தவும் தயங்காதவர். அவரது திரைப்படங்களின் கதாபாத்திர வடிவமைப்பில் மிகுந்த கண்ணியத்தைக் கடைப்பிடித்தவர். எளிய மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தியவர்.
சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர். இப்படிப்பட்ட ஒருவரின் கையில் மக்களின் பிரதிநிதித்துவம் என்ற அதிகாரம் கிடைத்தால், சமூகத்தின் எதிர்காலத்திற்கு, இளைஞர்கள் நல்வழியில் பயணம் செய்வதற்கு, மகளிர் மேம்பாட்டுக்கு, பெரியவர்கள் நல்வாழ்வுக்கு என அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்கள், தங்கள் வாழ்வு மேம்பட, தங்கள் மண்ணின் பெருமையைக் காக்க, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, கட்சி சார்பின்றி, தங்கர் பச்சானுக்கு, மாம்பழம் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.