கோடை வெப்பம் வாட்டி எடுத்து வரும் நிலையி்ல், அதை சமாளிக்க ஏசி வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், அவற்றின் விற்பனையும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் விற்பனையாளர்கள். இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல் வீசுவதாக தெரிவிக்கிறார்கள். காலையில் வீசும் வெப்பக்காற்று வீட்டு மேற்கூரைகளில் உள்வாங்கப்பட்டு இரவில் உஷ்ணமாக உள் இறங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எல் நினோ வருடம் என்பதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்கு குறைந்தது 3 மின்விசிறிகளாவது இருக்கிறது. எனினும், வெயிலை சமாளிக்க முடியாத காரணத்தால் AC-யை நாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் சந்தைகளில் ஏசியின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் விற்பனையாளர்கள். விற்பனை அதிகரித்தாலும் விலையில் மாற்றமில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதை சமாளிக்க குளிரூட்டும் இயந்திரங்களின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.