பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட மன்னிப்பு விளம்பரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள
உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து நுகர்பொருள் நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் விளம்பரங்கள் குறித்தும் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
ஆயுர்வேத மருந்து பொருட்களை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், பல்வேறு நோய்களுக்கு தங்களுடைய பொருட்களே சிறந்த முறையில் குணமளிக்கும் என்ற ரீதியில் விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் எச்சரித்தும், தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்ட, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. பதஞ்சலியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது மன்னிப்பும் கேட்கப் பட்டது. பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி விளம்பரம் செய்ய உச்ச நீதிமன்றம் பதஞ்சலிக்கு உத்தரவிட்டிருந்தது.
நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொது மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.
பொய் தகவல்களுடனான வரும் விளம்பரங்கள் மக்களை ஏமாற்றுவதாக அமைகின்றன. அந்த விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறுகின்றனர். இது ஒரு பொதுநல வழக்கு என்பதால், பதஞ்சலி நிறுவனத்துடன் மட்டும் இது முடிந்து விடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். Fast-moving consumer goods (FMCG) எனப்படும் அனைத்து நுகர்பொருள் நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் விளம்பரங்களையும் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைக்குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விளம்பரங்களின் அடிப்படையில் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். எனவே ,மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைச் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆழமான ஆய்வு செய்ய வேண்டியது அவசிய ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில், சட்டங்களுக்கு உட்பட்டு, 2018 முதல் எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகம், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள, இந்திய மருத்துவர்கள் சங்கம், பதஞ்சலி நிறுவனத்தை நோக்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு விரல் அதை சுட்டிக் காட்டும்போது, மற்ற நான்கு விரல்களும் தங்களை நோக்கி உள்ளதை இந்திய மருத்துவர்கள் சங்கம் உணர வேண்டும்.
மிகவும் விலையுயர்ந்த மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கு பரிந்துரைப்பது குறித்து பல புகார்கள் ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதியிலும் உள்ளன. இந்த விஷயத்தில், தேசிய மருத்துவ கமிஷனையும் இணைக்க வேண்டும்.
தவறான விளம்பரங்கள் மூலம் பொது மக்களின் வாழ்வில் விளையாடும் இது போன்ற விஷயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்கள் தொடர்பாகவும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.
கைக்குழந்தைகள், , பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விளம்பரங்களின் அடிப்படையில் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
எனவே, மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைச் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆழமான ஆய்வு செய்ய வேண்டியது அவசிய தேவை ஆகிறது தேவை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம், நுகர்வோர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் விதிகள், அந்த விதிகளை செயல்படுத்துவது தொடர்பான பிரச்னைகள் , ஆகியவற்றை பற்றி விரிவாக விசாரிக்கப் பட வேண்டும் என்றும், வெளிச்சத்தில் நெருக்கமாக ஆராயப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நடந்து கொண்ட முறை, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்கிறது என்று பலராலும் பாராட்டப்படுகிறது.