சென்னையில் 5 வயது சிறுமியை கடித்த rottweiler நாய்கள் உரிமமின்றி வளர்க்கப்பட்டது அம்பலமான நிலையில், உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரகு என்பவர் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். இவரின் 5 வயது குழந்தை சுதக் ஷா பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது, புகழேந்தி என்பவரின் rottweiler ரக நாய்கள் சிறுமியை பயங்கரமாக கடித்துள்ளன.
இதைத் தடுக்க முயன்ற சிறுமியின் தாய் சோனியாவையும் நாய் கடித்துள்ளது. அப்போது நாயின் உரிமையாளர் புகழேந்தி நாயை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், rottweiler நாய்கள் உரிமமின்றி வளர்க்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.