மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வருதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது இந்துக்களை பாகீரதி ஆற்றில் தூக்கி எறிவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுவதாக தெரிவித்த பிரதமர், மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தனர். அவர்கள் ஆட்சியில் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒருகாலத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய மேற்கு வங்கம், இன்றைக்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்து விட்டதாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட மேற்கு வங்கத்தில், தற்போது மூலை முடுக்கெல்லாம் வெடிகுண்டு தயாரிப்பு நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.