அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சிறிய வகை ஓடத்தில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி, வெளியே வந்தபோது 10 ஆண்டுகள் குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் திடுரி, கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
நீருக்கடியில் சாதனை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்ட இவரை வைத்து அட்லாண்டிக் பெருங்கடலில் சோதனை ஒன்றை நிகழ்த்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, 9 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை ஓடத்தில் அவர் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் அனுப்பப்ட்டார். கடலுக்கு அடியில் 93 நாட்களைக் கழித்த ஜோசப் திடுரி, மீண்டும் வெளியே வந்தார். அப்போது அவர் 10 வயது குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.
மேலும், மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் ஸ்டெம் செல் எண்ணிக்கை அதிகரித்தும் கொழுப்பின் அளவு 72 பாயிண்ட் குறைந்தும் காணப்பட்டது. நீருக்கு அடியில் நிலவும் அழுத்தம் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடலுக்கு அடியில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ததாக ஜோசப் திடுரி தெரிவித்தார். ஏற்கெனவே இதற்கு முன்னர் கடலுக்கு அடியில் 73 நாட்கள் வரை வாழ்ந்த அவர், தற்போது 93 நாட்களைச் செலவிட்டு தமது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.