இலங்கையிலிருந்து விமானம் மூலமாக இந்தியா வந்தடைந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, விமான நிலையத்திற்கு விரைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்தனர்.
விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த 4 பேரும், சென்னையில் இருந்து அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்ததும், பாகிஸ்தானில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் தகவலுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் நால்வரிடத்திலும் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.