இரவு வேலை செய்பவர்கள் பெரும்பாலும், நீரழிவு மற்றும் உடல் பருமன் போன்ற ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு ஆளாகுகின்றனர். இரவு நேரங்களில் பணி செய்பவர்களுக்கு ,உடல்நலம் மற்றும் மனநலம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் என்று புரோட்டியோம் ஆராய்ச்சி இதழ் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவின், வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மற்றும் பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான குழு அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இரவு நேரப் பணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு, அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படுவதுடன், உடல் எடையும் அதிகமாகிறது. ஏன் இந்த உடல்நல பாதிப்பு இரவு பணிகளில் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்ன ? இரவு பணி செய்பவர்களின் உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதை ஆய்வு செய்ததில் பல புதிய ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன.
(Journal of Proteome Research) புரோட்டியோம் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் பங்கேற்ற பங்கேற்பாளர்களை வைத்து தொடர்ந்து, மூன்று நாட்களுக்குஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இரவு அல்லது பகல் என்ற இரு நிலைகளிலும், 24 மணிநேரம் முழுவதும் சீரான இடைவெளியில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இரத்த அடிப்படையிலான நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களில் உள்ள புரதங்களைக் கண்டறிய செய்யப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், என்னென்ன என்று கூர்ந்து கவனிக்கப்பட்டன.
பகல் பணியில் இருந்த பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேர பணியில் உள்ள பங்கேற்பாளர்களின் ரத்தத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக இரவு நேர பணியில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரப்பது குறைந்து கொண்டே வருகிறது . ஆகவே தான் அவர்கள் அதிகமாக நீரழிவு நோய்க்கு ஆளாகின்றனர் . அதனால் அவர்களுக்கு உடல் எடையும் கூடுகிறது என்று கூறுகிறது.
ஆய்வின் முடிவு இது தான் . பெரும்பாலும் இரவும் பகலும் என மாறி மாறி வேலை செய்யும் போது உடல் உறுப்புகள் குழம்புகின்றன. எனவே இது உடல்நலம் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இரவுநேர பணியில் இருப்பவர்களுக்கான ஆரோக்கிய பரிந்துரைகளையும் இந்த ஆய்வறிக்கை வலியறுத்தி உள்ளது.
எப்போதும் அதிக தண்ணீர் பருக வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் , ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
இரவு நேர வேலை முடிந்ததும் காபி போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தும் அதே நேரத்தில், இந்த இரவு நேர வேலைக்கு ஏற்ப சரியான உணவுகளை நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆய்வுக் குழுவின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரவு வேலை முடிந்து வீடு திரும்பியதும், வேறு வேலைக்கு செல்லாமல் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் மருத்துவர்கள், இரவு பகல் தொடர்ந்து பணி செய்வது தவறானது பழக்கமாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.
வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மற்றும் பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான குழுவின் இந்த ஆய்வு மனிதனின் செயல்பாடுகளே உடலுக்கு நோயை ஏற்படுத்துகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது.