மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த முறை பெற்றதைப் போல 303 அல்லது அதை விட சில கூடுதல் தொகுதிகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.
மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான அலை எங்கும் இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.
நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி வந்தால், தங்களது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைப்பதாக தாம் கேள்விப்படவில்லை என பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார் .
அடிப்படை மட்டத்தில் இருந்து பார்க்கும்போது, மத்திய அரசுக்கு எதிரான பரவலாக கோபமும் இல்லை, சவால் விடும் அளவுக்கு யாரும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்
நாட்டின் மேற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள 325 மக்களவை தொகுதிகளில் 2014 முதல் பா.ஜ.க வலுவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்படும் என்றும் ஆனால் அப்படி நடக்கும் என தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.
அதே போல் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்குகளும், தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் உறுதியாக தெரிவித்துள்ளார்.