சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் முறையான அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமராவதி ஆற்றின் கிளை நதியான சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதால், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்ததுடன்,
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு முன் சுற்றுச் சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு அனுமதி பெற்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், கேரள அரசு உரிய அனுமதி பெறவில்லை என்றால், தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கேரள அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்றும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.