மனிதனுக்கு மாற்றாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த ரோபோடிக்ஸ் இயந்திரம் குறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்….
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதற்கான PEMSR தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்பட்டதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில், சென்னையில் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு, 3 நவீன அடைப்பு நீக்கும் ‘பண்டிகூட்’ இயந்திரங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ONGC நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட CSR நிதி மூலம் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை கொண்டு, குழாய் வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும், மேலும், கழிவுநீர் குழாயில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றவும், விஷவாயு கசிவை கண்டறியவும் சென்சார் கேமராக்கள் போன்ற சிறப்பு அம்சங்களும் ‘பண்டிகூட்’ இயந்திரத்தில் உள்ளதாக ரோபோடிக் ஆப்பிரேட்டர் தெரிவித்தார்.
குறிப்பாக, சென்னை முழுவதும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் கழிவுநீர்குழாய் அமைத்து, 9 லட்சத்து 30 ஆயிரம் கழிவுநீர் எடுத்து செல்லப்படுகிறது. பின்னர், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று நாள்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நவீன அடைப்பு நீக்கும் ரோபோடிக் இயந்திரம் கொண்டு வந்திருப்பது, தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்றால் அது மிகையில்லை. இதனால் அவர்களின் நேர விரயம், பணி சுமை மற்றும் உயிர் பலியும் வெகுவாக குறையும். இந்த நவீன ரோபோடிக்ஸ் கழிவு நீக்கும் இயந்திரம் சோதனை வெற்றி பெற்றால், சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்துவதே சென்னை குடிநீர் வாரியத்தின் இலக்காக உள்ளது.
கழிவுநீர் அடைப்புகளை நீக்க இறக்கப்படும் ஆட்கள் எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கி மரணத்தை சந்திந்து வருவது தற்போது வரை நீடிக்கும் சூழ்நிலையில், கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களின் ஹீரோவாக திகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.