நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார்.
கோடை சீசனை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் மற்றும் பழக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பழக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அவர் மலர் நாற்றுகளை வழங்கினார். 2 டன் கருப்பு திராட்சை பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கிங் காங் உருவம் அனைவரையும் கவர்ந்தது.
மேலும், மினியன், டைனோசர், நத்தை போன்ற உருவங்களும் பல்வேறு பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் மட்டும் நடைபெறும் இந்த பழக்கண்காட்சி, இந்த ஆண்டு முதன்முறையாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.