நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலீசாரால் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் உவரி அருகே கரைசுத்துபுதூரில் வசித்து வந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த 2ஆம் தேதி வீட்டு தோட்டத்தில் பாதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 11 தனிப்படைகள் அமைக்கப்படும் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் முதல் கட்ட விசாரணையை முடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நண்பர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சம்மன் அனுப்பப்பட்டவர்கள் 2 நாட்களில் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதால் விசாரணை சூடுபிடித்துள்ளது.