பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து, மூன்றாவது முறையாக இந்தியாவை பிரதமர் மோடி தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்று இந்திய மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். பிரதமராக மோடி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
பிரதமர் நரேந்திர மோடி! அவர் கனவு காணவும் அதை சாத்தியமாக்கவும், துணிந்த ஒரு தலைவர், மற்றவர்களை ஊக்குவிப்பவர் மற்றும் சவாலான செயல்களைச் செய்து முடிப்பவர். காலத்துக்கேற்ற சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி முன்னேற்றப் பாதை காட்டுபவர்.
அவரது முடிவெடுக்கும் பாணியை அடிக்கடி கேள்விக்குள்ளாக்கிய விமர்சகர்கள் உலகமெங்கும் இருந்தாலும், ஆனால் தைரியமாக முடிவெடுக்கும் அவரது பாணி இன்றும் தொடர்கிறது.
“ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற இந்தியாவின் G20 மந்திரத்திற்கு மேற்கு நாடுகளையும் ரஷ்யாவையும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்ளச் செய்ததே அவரின் நிகரற்ற சாதனை. சாத்தியமற்றதாகக் கருதப்பட்டவற்றை அவரால் தான் சாத்தியமாக்கிக் காட்ட முடிந்தது.
2014ம் ஆண்டு மே 26ம் தேதி முதல் முறையாக இந்தியாவின் 16வது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். விடுதலை அடைந்த பிறகு பிறந்து, இந்தியாவின் முதல் பிரதமரான பெருமையைப் பெற்ற பிரதமர் மோடி, அடுத்து அடுத்து நிறைய முதல் முதலாக என்ற சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.
முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆன போதே, குஜராத் மாநிலத்தின் முதல்வரானவர். அதேபோலவே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான போதே நாட்டின் பிரதமர் ஆனார்.
அதுமட்டுமில்லை, 2014 ஆம் ஆண்டு , முதல்முறையாக மக்களவையில் அறுதிப்பெரும்பான்மை உடைய அரசாக பாரதீய ஜனதா கட்சியின் அரசை அமைத்த பெருமை பிரதமர் மோடியையே சேரும்.
வறுமையின் பிடியில் உள்ள குடும்பத்தில் பிறப்பதை விட துரதிர்ஷ்டம் வேறு இருக்கமுடியாது. மோடி அப்படி ஒரு சராசரிக்கும் கீழே உள்ள ஏழை குடும்பத்தில் பிறந்துதான் இந்த அளவுக்கு தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார்.
பழைய பம்பாய் மாநிலத்தில், இன்றைய குஜராத்தில் வடக்கு பகுதியில், மெஹ்சானா மாவட்டத்தில், வாட் நகரில் மளிகை கடைக்காரர்கள் குடும்பத்தில், தாமோதர்தாஸ் முல்சந்த் மோடிக்கும் ஹீராபென் மோடிக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக மோடி பிறந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, பிறந்த போது , அவரது குடும்பம் கிட்டத்தட்ட ஏதுமில்லாத ஒரு குடும்பமாகத் தான் இருந்தது. மொத்த குடும்பமும், முறையான கழிப்பறை, குளியலறை, சமையலறை இல்லாத ஒரு சிறிய வீடு மாதிரியான ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தது.
அன்றாட வாழ்க்கையைப் பெரும் போராட்டத்தில் கழிக்க வேண்டிய சூழலில் குடும்பம் இருந்த நிலையில்,மோடியின் தந்தை வாட் நகர் ரயில் நிலையத்தில் சிறிய அளவில் ஒரு டீ கடை நடத்தி வந்தார். குழந்தை பருவத்திலேயே, வாட் நகர் ரயில் நிலையத்தில் மோடி தேநீர் விற்று, தனது தந்தைக்கு உதவியாக மோடி இருந்து வந்தார். பிறகு வாட் நகர் பேருந்து நிலையம் அருகே தனது சகோதரருடன் டீ கடை நடத்தி வந்தார் மோடி.
பாரத நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்த காரணத்தால், 8 வயதிலேயே தேசத்துக்காக பணியாற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு உள்ளூர் ஆர்ஆர்எஸ் ஷாகா வில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
மோடியின் சுறுசுறுப்பையும் தேசத்துக்கான அர்ப்பணிப்பையும் கண்டறிந்து, ஆர்.ஆர்.எஸ்ஸின் பாலஸ்வம்சேவக் பிரிவில் சேர்த்த வழக்கறிஞர் லக்ஷ்மண் ராவ் இனாம்தார் தான் மோடிக்கு முதல் அரசியல் வழிகாட்டி!
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்னும் மாணவர் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்த மோடி, இடையே சில ஆண்டுகள், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டதோடு, கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்ட பேலூர் ஆசிரமம் உட்பட வேதாந்த இந்து ஆசிரமங்களில் தங்கி, மீண்டும் வாட் நகர் திரும்பினார்.
அந்த கால கட்டத்தில், மோடி, தனது மாமாவுடன் குஜராத் மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தில் உள்ள கேன்டீனில் வேலை செய்தார்.
1971ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நடந்த அகிம்சை போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட மோடி, இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பிறகு , தனது மாமா கேண்டீனில் வேலை செய்வதை விட்டு விட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர பிரச்சாரகர் ஆனார்.
1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி , இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்து, தனது அரசியல் எதிரிகளை ஜனநாயகத்துக்கு விரோதமாக சிறையில் அடைத்தார். மேலும் எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. ஆர்.ஆர்.எஸ்ஸும் தடை செய்யப் பட்டது. நெருக்கடி நிலை அமலில் இருந்த காலக்கட்டத்தில், ஜனநாயக போராட்டங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
எண்பதுகளில் , குஜராத் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் மோடி. இந்தப் பயணத்தின் மூலம் குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று , மக்களை நேரடியாக சந்தித்தார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க கடினமாக உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்த மோடிக்கு அடுத்த பொறுப்பு அளிக்கப்பட்டது.
தமது அயராத தேசப்பற்றாலும், தன்னலமற்ற சேவையாலும் மற்றும் கடுமையான உழைப்பாலும் , பலராலும் பாராட்டுக்களைப் பெற்ற மோடி, பாஜக உறுப்பினராகி , குறுகிய மாதங்களிலேயே , கட்சிப் பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
பல மாநிலங்களில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய மோடி, 1998ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் பதவி ஏற்றபோது, மோடி கட்சியின் தேசிய தலைவரானார்.
தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களுக்கு எல்லாம் பெருமையைத் தேடி தந்த மோடியை, குஜராத் முதல்வராக நியமித்தது பாஜக தேசிய தலைமை.
2001ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி, குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடிக்கு ஒரு சிரமம் ஏற்பட்டது. முதல்வராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கோத்ரா சம்பவம் நடந்தது. உண்மை இல்லை என்ற போதும் , மோடி மீது அவதூறுகள், விமர்சனங்கள்,எழுந்தன.
மக்கள் மீது கொண்ட நம்பிக்கையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு , அதே ஆண்டு தேர்தலைச் சந்தித்து , அபார வெற்றி வெற்றி மீண்டும் குஜராத் முதல்வரானார்.
2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று குஜராத்தில் மூன்றாவது முறையாக முதல்வரான மோடி, குஜராத் அரசியல் வரலாற்றில் , நீண்ட காலம் முதல்வர் என்ற சாதனையைப் படைத்தார்.
தொடர்ந்து 2012 ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காவது முறையாக, குஜராத்தின் முதல்வராகி , இந்திய அரசியல் வரலாற்றிலேயே புது சாதனை ஏற்படுத்தினார். மோடியின் தலைமையிலான குஜராத் அரசு, சிறந்த நிர்வாகத்துக்கு உதாரணம் என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியது.
குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது, போதைப் பொருட்களுக்குத் தடை விதித்தது, கடலோரப் பாதுகாப்பைப் பன்மடங்கு பலப் படுத்தியது, பெண்கல்வி, குடிநீர் வசதி,சாலை மேம்பாடு, பொது சுகாதாரம், விவசாயம்,தொழில் வளர்ச்சி, என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுத்திய மோடி, எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு ஊழலற்ற ஆட்சியை வழங்கினார்.
முதல் முறையாக குஜராத் மாடல் என்று ஒரு முன் மாதிரியை இந்தியாவுக்கே வழங்கியவர் மோடி. பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே ஒரே நோக்கமாக செயல்பட்ட மோடியின் குஜராத் மாடல் அரசு இந்தியாவுக்கு வேண்டும் என்று மக்கள் முடிவு செய்தனர்.
2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் வந்தது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, மோடி 1, 85,000 மைல்களுக்கு மேல் பயணம் செய்து 457 பேரணிகளில் கலந்து கொண்டு, ஒரு அதிபர் தேர்தலுக்கான பாணியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அனைவருக்குமான வளர்ச்சி என்ற உத்தரவாதத்தை முன் வைத்து “மிஷன் 272+ என்பதை சாதித்து காட்டினார் மோடி.
2014ம் ஆண்டு மோடியை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். அதுவரை காங்கிரசின் பிடியில் இருந்த இந்தியாவில் மீட்டு எடுத்து மோடியின் கையில் கொடுத்தனர் மக்கள் .
பிரதமர் மோடியின் முழக்கங்கள் எப்போதுமே மனதில் நிற்பவை. மக்களை ஊக்கப் படுத்துபவை. அதிலும் தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடியின் தேர்ந்தெடுத்த தேர்தல் முழக்கங்கள் வெற்றிக்கு அச்சாரம் போட்டன.
எதிரிகளிடம் இருந்தே அவர்களை வெல்வதற்கான ஆயுதத்தை எடுப்பது போர் தந்திரம் என்பார்கள். 2014 ஜனவரி 8ம் தேதி, நடைபெற்ற , பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்வில், பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ‘ நாட்டு மக்கள் மோசமான நாட்களை எதிர்கொள்வதாகவும், விரைவில் நல்லகாலம் வரும் என்று கூறியிருந்தார்.
இதனையே , 2014 தேர்தல் பிரச்சாரத்தில், அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடி காங்கிரசை வீழ்த்துவதற்கான முழக்கமாக ‘ நல்ல நாட்கள் வருகின்றன!’ என்ற முழக்கத்தை ‘ஆச்சே தின் ஆனே வாலே ஹைன்’ என மக்கள் முன் வைத்தார்.
அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிந்ததும், “இந்தியா வெற்றி பெற்றுள்ளது! நல்ல நாட்கள் வரப்போகிறது!’ என்றே மோடி ட்வீட் செய்திருந்தார்.
அப்போது அன்றைய நாளில் அதிக ரீ ட்வீட் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவாக மோடியின் இந்த ட்வீட் சாதனை படைத்தது.
2015ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு நிகழ்வில், “இந்தியா வெற்றி பெற்றுள்ளது! நல்ல நாட்கள் வரப்போகிறது! என்று கூறி, பிரதமர் மோடியை அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், “ஒரு தேநீர் விற்றவர்,உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை தலைமை தாங்கி நடத்துவது ஒரு சாதனையே. பிரதமர் மோடி சொன்னதை செய்திருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.
2014 தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று சொல்கிறது என்றும், தனது வெற்றி உரையில் தெரிவித்த பிரதமர் மோடி, அதற்காக கடுமையாக உழைத்து மக்களின் கனவை நனவாக்குவேன் என்று உறுதியளித்தார்.
முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற மோடி, இந்திய மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அரசு நடத்தி மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
யாரும் பின் தங்கி விடக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையுடன், ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிரதமர் மோடி ஏழைகளுக்கும், ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் சேவை செய்வதே தனது அரசின் அடிப்படை நோக்கம் என அறிவித்தார்.
அவர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.
டிஜிட்டல் இந்தியா என்றும், UPI பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றும், பேசுவதற்கு முன்னோடியான ஒரு திட்டத்தைத் தான் பிரதமரானதும் மோடி முதலில் கொண்டு வந்தார். அது தான் ‘ஜன்தன் வங்கிக்கணக்கு’ திட்டம். இந்த திட்டத்தின் மூலம் , எல்லா இந்தியர்களுக்கும் வங்கிக் கணக்கு என்பதை சாத்தியமாக்கினார். 48 கோடிக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஜன்தன் திட்டத்தால், நாட்டின் நிதி கணக்குகள் முறைப்படுத்த பட்டது. மேலும், செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதி இடையில் யாரும் திருடாமல் முழுப்பணமும் மக்கள் வங்கிக்கணக்கை சென்றடைந்தது. இது பிரதமர் மோடியின் அரிய சாதனை என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.
பல்வேறு சர்ச்சைகள் எழுந்த போதும், பிரதமர் மோடி, எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்பதை நடைமுறையாக்கினார்.
GST என்னும் புதிய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தைக் கொண்டு வந்து, நாட்டில் போலி நிறுவனங்கள் வழியாக நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, வரி வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவந்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தார் என்றே சொல்லவேண்டும்.
மேலும் , பிரதமர் மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என,பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் துணிச்சலாக எடுத்து பல போலி நிறுவனங்களுக்கு முடிவு கட்டி, நாட்டில் பல கோடி ரூபாய் ஊழல் பணத்தை ஒழித்தார்.
அடிப்படை நிர்வாகம் தவறாக இருந்தால், அரசு கொண்டு வரும் எந்த நல்ல திட்டங்களாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகும். இதை நன்கு அறிந்த பிரதமர் மோடி, முதலில், இந்தியாவின் அடிப்படை நிர்வாக,நிதி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, அவை முறைப்படுத்தினார்.
பெண்குழந்தை பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்தில் அவருக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்ட, பிரதமர் மோடி, ‘பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம்’ என்ற அற்புதமான திட்டத்தை ‘ பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ (BBBP) என்று அறிவித்தார். இது, பெண் குழந்தைகள் மீது அவருக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தியது.
பெண்களுக்கும் அதிகாரம் அளித்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி இந்தியப்பெண்களுக்கு தந்துள்ள நலத்திட்டங்கள் ஒன்று இரண்டல்ல… ஏராளம்…
இந்தியக் கிராமங்களில், பயன்படுத்தப்படும் அசுத்தமான சமையல் எரிபொருளுக்குப் பதிலாக சுத்தமான மற்றும் அதிக திறன் கொண்ட எல்பிஜி சிலிண்டரை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதமர் மோடியின் உஜ்வாலா யோஜனா திட்டம்…, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி 14.52 கோடி எல்பிஜி இணைப்புக்கள், 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 32 கோடியாக அதிகரித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான 2019ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் , இந்திய கிராமங்களில் 12 மில்லியன் கழிவறைகளைக் கட்டுவது என்ற இலக்குடன் Swachh Bharat Abhiyan தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டது. 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்ட நிலையில், கூடுதலாக 12 கோடி குடும்பங்களுக்குக் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக, Kasturba Gandhi Balika Vidyalaya என்ற பெயரில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
கிராமத்தில் உள்ள பெண்களுக்குத் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கவும், கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் மகளிர் சக்தி கேந்திரா (MSK) என்ற அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், ஏழைப் பெண்களுக்கு சலுகை அடிப்படையில் சிறுகடன் வழங்க ராஷ்ட்ரிய மகிளா கோஷ் (RMK),,,,
பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை உறுதி செய்தது..,
3 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படும் வகையில் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம்..,
27 கோடிக்கும் அதிகமான தொழில் முனையும் பெண்களுக்கு, பலகோடி ரூபாய் முத்ரா கடன்கள் வழங்கியதால், நாட்டில் எல்லா மாநிலங்களிலும் பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகமானது.
இப்படி, இந்திய பெண்களின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி முன்னுரிமை தந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
2014 ஆம் ஆண்டு மேக் இன் இந்தியா என்னும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். முதலீட்டை எளிதாக்குவதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும், சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்தியாவை உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புதுமைக்கான மையமாக மாற்றுவதற்கான முதல் முயற்சி தான் மேக் இன் இந்தியா.
மேக் இன் இந்தியா இந்திய தொழில் வளர்ச்சியை அசுர வேகத்தில் கொண்டு சென்றது. சின்ன உற்பத்தி பொருட்கள் தொடங்கி ,ராக்கெட் தயாரிப்பிலும் மேக் இன் இந்தியா என்னும் அளவுக்கு இந்திய உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இந்த நிலையில் இந்தியாவின் உள் கட்டமைப்புக்களை முறையாக மேம்படுத்தியதில் பிரதமர் மோடியின் திட்டங்கள் முக்கியமானவை.
வந்தே பாரத், புல்லட் ரயில், என்று பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் இரயில்வே துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
விவசாய நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம், மேலும் முதல் முறையாக, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் பிரதமர் மோடி ஆட்சியில் தான் தரப்பட்டது. கூடுதலாக நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புக்காக தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டன.
பிரதமராக மோடி ஆட்சி ஏற்பதற்கு முன் இந்தியாவில்,703 பல்கலைக்கழகங்களே இருந்தன. இப்போது 1000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 5000க்கும் மேல் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில் 43 சதவீத பல்கலைக்கழகங்களும், 61.4 சதவீத கல்லூரிகளும் நாட்டின் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
2014 ஆம் ஆண்டுக்கு முன் வரை நாடு முழுவதும் 7 AIIMS அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்களே இருந்தன. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபின், இன்றைக்கு 23 AIIMS அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் இருக்கின்றன.
மேலும், 700க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் பிரதமர் மோடி காலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஐம்பதாயிரமாக இருந்த மருத்துவ இடங்கள் இன்றைக்கு 1 லட்சத்துக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு IIT மற்றும் ஒரு IIM கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
உலக இளைஞர்களுடன் போட்டியிடும் வகையில் இந்திய இளைஞர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான வாய்ப்புக்களை கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கி தந்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம், சிறந்த வருங்காலம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இளைய தலைமுறை போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி, போதைப் பொருளுக்கு எதிரான தேசிய செயல்திட்டத்தை வடிவமைத்து போதைப்பொருளை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தீவிரமாக்கினார்.
மேலும் போதைப்பொருளுக்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள தொடர்பை உலக அரங்கில் புரிய வைத்து, ஒரு கூட்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வைத்தார்.
இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடிஉருவாக்கிக் கொடுத்தார். இதெல்லாம் பிரதமர் மோடி, இந்திய இளைஞர்கள் மீது வைத்துள்ள அக்கறையையும் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது என்றும், அதிகவேலை வாய்ப்புக்களைத் தந்து புதிய வரலாறு படைத்தார் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
திடீரென கொரொனா தொற்று நோய் பரவி , உலகையே முடக்கிப் போட்ட கால கட்டத்தில் , ஒரு சிறந்த தலைவனாக பொறுமையாகவும் , நிதானமாகவும் , விவேகமாகவும் முடிவெடுத்து, கொரொனாவால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் இந்தியாவைக் காப்பற்றினார்.
முன்பெல்லாம், எந்தவொரு தொற்றுநோய் வந்தாலும் அதற்கான தடுப்பூசிகளை இறக்குமதியே செய்து வந்தோம். கொரொனா காலத்தில், பிரதமர் மோடியின் உத்வேகத்துடன், இரண்டு உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசிகள் ஒன்பதே மாதங்களில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 220 கோடி தடுப்பூசிகள் மூன்று டோஸ் வரை இந்திய மக்களுக்கு முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்தியர்களைக் காப்பற்றியது போலவே, பிறநாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்து உதவியது மோடியின் பெருங்கருணை.
உலகமே மிக கடுமையான சிக்கல்களை வெவ்வேறு வழிகளில் சந்தித்து கொண்டிருந்த நேரத்தில், ஜி-20 மாநாட்டை நடத்தி இந்தியா வரலாறு படைத்தது.
இந்தியாவின் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரியப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில்,
பிரதமர் மோடி , ஜி 20 மாநாட்டை மிக சிறப்பான முறையில் நடத்தி உலக அரங்கில் இந்தியாவை முதன்மை படுத்தினார்.
ஜி 20 தலைவரின் டெல்லி பிரகடனத்தை உலகத்தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமின்றி ஆப்பிரிக்காவை ஜி 20 அமைப்பில் சேர்த்துக்கொள்ள பிரதமர் மோடியின் பரிந்துரையையும் உலக தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் குரலே GLOBAL SOUTH இன் குரல் என்பதை பிரதமர் மோடி உரக்கச்சொன்னார்.
2014ம் ஆண்டுக்கு முன் வரை ஆயிரக் கணக்கில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இருந்த இந்தியாவில் பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்தபின் தான் , நாட்டில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் வருஷத்துக்கு12000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துள்ளன என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகின்றன .
சந்திராயன் 3 திட்டத்தின் வெற்றி, நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு பிரதமர் மோடி தந்த ஊக்கமும் ஆதரவும் மிக முக்கியமானவை. தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L 1, வெற்றிகரமாக செலுத்தி, விண்வெளித்துறையிலும் இந்தியா அபரிதமான சாதனை புரிந்துள்ளது.
பல காலமாக அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்ற பெரும்பாலான இந்தியர்களின் எண்ணத்தை, நீதிமன்ற தீர்ப்பின் வழி, மிக பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தி , 500 ஆண்டு கால சிக்கலைத் தீர்த்த வைத்ததே பிரதமர் மோடியின் பெருஞ் சாதனை என்று பலர் பாராட்டுவதைப் பார்க்கமுடிகிறது.
இந்தியாவின் இன்னொரு நீண்டகால பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை. 370 சட்டப்பிரிவை நீக்கினால் இந்தியாவில் உள்நாட்டு கலவரம் வருமென்று சொல்லப்பட்டதை எல்லாம் துாக்கி எறிந்துவிட்டு , காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதித்து , 370 சட்டப்பிரிவை துணிச்சலோடு நீக்கினார் பிரதமர் மோடி. காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
அண்டை நாடுகளில் பெரும்பான்மை மதப் பிரிவினரால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவரும், 6 சமூக மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து ஆதரவற்ற மக்களின் பாதுகாவலனார் பிரதமர் மோடி.
எதிரியை எதிரியின் வீட்டிலேயே சென்று அடிப்பதாக, பாகிஸ்தான் எல்லைதாண்டி சென்று , சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை வீழ்த்திய பிரதமர் மோடியின் துணிச்சலை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற போது 1 டிரில்லியன் டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் இப்போது 3.5 டிரில்லியன் டாலர்களைத் தண்டி இருப்பதாக கூறப்படுகிறது. உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்துளளது என்பதற்கு மோடியின் நிர்வாகத் திறமையே காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.
கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் இந்தியாவுக்காக பயன்படுத்துவதில் மோடியை வெல்ல வேறு ஆளே இல்லை என்று சொல்ல வேண்டும் .
பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனது உரையின் போது, சர்வதேச யோகா தினத்தை அறிமுகம் செய்து கௌரவப்பப் படுத்தினார். அவரது முயற்சியால் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் என்று அங்கீகரிக்கப் பட்டு , இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தலைமையை உலகத் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்கள், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள்எனப் பலரும் பாராட்டுகின்றனர்.
2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ஐநாவின் உயர்மட்ட சுற்றுச்சூழல் விருது, பூமியின் சாம்பியன் என்ற விருதைப் பெற்ற பிரதமர் மோடிக்கு அடுத்து, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார செழுமைக்கு பங்களிக்கும் மதிப்புமிக்க சியோல் அமைதி விருது வழங்கப் பட்டது.
ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூவும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இப்படி உலகநாடுகள் எல்லாம் பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகள் வழங்கி சிறப்பித்தது
இந்தியாவின் சிற்றூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், சாதாரண டீ விற்பவராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று உலகத் தலைவர்கள் எல்லாம் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து , உயர்ந்து நிற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பாரத நாட்டின் பாரம்பரியத்தை விட்டுவிடாமல், வளர்ந்த நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில்,எல்லாத் துறைகளிலும், முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியதே மோடியின் தனிப் பெரும் சாதனை.
மராத்தான் வீரரான எலியுட் கிப்சோஜினின் சகிப்புத்தன்மை,, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஆக்ரோஷமான பேட்டிங் பாணி, செஸ் கிராண்ட்மாஸ்டர் கேரி காஸ்பரோவை போல் வியூகம் அமைக்கும் திறமை , இப்படி பிரதமர் மோடி , துணிச்சலான ஆனால் கணக்கிடப் பட்ட அபாயகரமான செயல் திட்டங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுத்துவருகிறார்.
எண்ணித் துணிக கருமம் என்பதற்ககேற்ப, துணிச்சலான முடிவுகளைத் தைரியமாக எடுப்பதாகட்டும்; எடுத்த முடிவில் அசைக்க முடியாத உறுதிப் பாட்டுடன் நிற்பதாகட்டும்; அவரது தலைமையானது தொலைநோக்குப் பார்வையுடன் செயல் படுவதாகட்டும்; எல்லோருக்காகவும் எல்லோருடனும் என கடுமையாக உழைப்பதாகட்டும்; மோடிக்கு நிகர் மோடி தான்.
ஒரு சேவகனாக தன்னை பிரகடனம் படுத்திய பிரதமர் மோடி , இப்போது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராக ஆகி இருக்கிறார். இந்திய மக்கள் எல்லோரும் நாங்கள் மோடியின் குடும்பம் என்று சொல்லுகிறார்கள். இது தான் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் உள்ள ஆழமான பரிசுத்தமான உறவு.
அனைவருக்கும் உத்வேகம் தரக்கூடிய அவரது உன்னதமான வாழ்க்கையின் அடிப்படையாக உண்மையும் நேர்மையும் அமைந்திருக்கின்றன. அவரது வாழ்விலிருந்து இருந்து பாடம் கற்றுக்கொள்ள எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. கற்றுக் கொள்வோம்.