நாளை 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 272 தேவை என்ற நிலையில் என்டிஏ 293 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் என்டிஏ நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடரந்து ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
அப்போது நரேந்திர மோடியை நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும்
வழங்கினர். இதனையடுத்து பிரதமராக பதவியேற்க வருமாறு மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.