ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகரா, டிமென்ஷியா எனப்படும் நினைவு இழக்கும் நோயைத் தடுக்க உதவும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த புதிய ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் வயகரா என்ற பெயரிலான சில்டெனாபில் என்ற வேதி பொருள் முதலில் இதயநோய்க்கான மருந்தாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
பிறகு ஆண்மை குறைபாடு தீர்வதற்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக, ஆண் ,பெண் இருவருக்கும் பல்மொனெரி ஹைப்பர் டென்ஷன் எனப்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் வயகரா சிறந்த மருந்து எனக்கூறப்பட்டது. இப்படி,வேறு பல நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தும் வகையில் இந்த வயகராவில் மருத்துவப் பயன்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துக் கொண்டே வந்தனர்.
ஏற்கெனவே , அமெரிக்காவின் கிளீவ் லேண்ட் மருத்துமனை மருத்துவர்கள் மற்றும் பிரிட்டனின் எடின்பரோ பல்கலைக்கழக மூளை ஆராய்ச்சி வல்லுநர்கள் செய்த ஆராய்ச்சிகளில் , வயகரா மருந்து , எடுத்துக் கொள்பவர்களுக்கு முதுமை காரணமாக வரும் நினைவு இழப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு என கண்டுபிடிக்கப் பட்டிருந்தது. இது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அல்சைமர் டிமென்ஷியா என்னும் நினைவு இழப்பு நோய்க்கு வயகரா சிறந்த குணமளிக்கிறது என்று தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மூளையில் அமிலோய்ட் என்ற நியூரான்களின் தொடர்பு அறுந்து போவதால் ஏற்படும் மறதி நோய் அல்சைமர் டிமென்ஷியா என்றும், ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனையால் வரும் மறதி நோய் வாஸ்குலர் டிமென்ஷியா என்றும், மருத்துவர்கள் மறதி நோயை இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள்.
இதில் வாஸ்குலர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப் பட்டவர்களே அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. வாஸ்குலர் டிமென்ஷியா நோயால் ஏற்படும் நினைவாற்றல் குறைபாடு உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வாஸ்குலர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறதி படிப்படியாக ஏற்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, சுமார் 5.3 மில்லியன் டிமென்ஷியா நோயாளிகள் உள்ளனர் என்றும், அதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வாஸ்குலர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட டிமென்ஷியா பற்றிய ஆய்வு, மருத்துவ உலகில் ஒரு திருப்பு முனை என்று பல மருத்துவ அறிஞர்கள் பாராட்டுகின்றனர்.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, ஞாபக மறதி நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் இனி வயகரா முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.