மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி நான்கு முக்கிய அமைச்சகங்களைக் கூட்டணி கட்சிகளுக்குக் கொடுக்கவில்லை. உள்துறை, ராணுவத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை ஆகிய துறைகளைப் பாஜக தன் வசமே வைத்துக் கொண்டது. இதற்கு என்ன? என்பது தற்போது பார்ப்போம்.
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக மிக முக்கியமானதாகும். தேசிய பாதுகாப்பு என்பது ஒரு அரசின் முதன்மையான பணியாகும். தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் ஒரு அரசாங்கம் நடந்தால், அந்நாட்டு மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? ஆகவே சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதே ஒரு அரசின் முதல் கடமையாகும்.
இதற்காக, இந்தியாவில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு உருவாக்கப் பட்டது. உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் உறுப்பினர்களாக இருக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பார்.
இந்த அமைப்பு, 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி, அன்றைய பிரதமர் வி.பி,சிங்கால் தொடங்கப் பட்டது. ஆனால் ஒரு முறை கூட கூட்டம் நடத்தவில்லை. அதே ஆண்டு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு என்று ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஒருமுறை மட்டுமே கூடியது. அதுவே எந்த முடிவையும் எடுக்காத முதல் கூட்டமே, கடைசி கூட்டமாகவும் ஆனது.
அந்த கால கட்டத்தில், இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் , அதனால் வந்த குளறுபடிகள் என பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு செயலிழந்தது.
அதன் பின் 1998ம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரான பின் , பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தான், கூட்டுப் புலனாய்வுக் குழு, தேசிய பாதுகாப்பு ஆலோசனை ஆணையம் மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கை குழு ஆகிய அமைப்புகளை உள்ளடக்கி ‘ பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு’ விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அமைப்புக்கென்று ஒரு தனி ஆலோசகர் பதவியும் அமைக்கப்பட்டது.
உள்நாட்டு பாதுகாப்பு வரும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே அறிவது, அவற்றைத் தடுப்பது, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வது, மற்றும் அனைத்து மாநிலங்களில் தேச விரோத செயல்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது போன்றவை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் முக்கிய பணிகளாகும்.
இதுமட்டுமில்லாமல், தேசிய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது மற்றும் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்காத வெளியுறவுக் கொள்கைகளைக் கடைபிடிப்பது ஆகிய முடிவுகளை இந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு தான் தீர்மானிக்கிறது.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழுவின் மற்றொரு முக்கிய பணி என்பது, நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் எழும் போது, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து அதற்கான உடனடி தீர்வைக் காண்பதாகும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய பதவிகள் மற்றும் கட்டமைப்புகளைக் காலத்துக்கு ஏற்றவாறு வடிவமைப்பது மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் வழங்குவது, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு, இராணுவத் துறை மேம்பாட்டுக்ககான நிதி வழங்குவது, எல்லாமே இந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு தான்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய பாதுகாப்பு அமைப்பு, 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் செயலிழந்தது.
மீண்டும் பாஜக ஆட்சி வந்தவுடன் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு மீண்டும் புத்துயிர் பெற்றது. 2014ம் ஆண்டு முதல் முறையாக, பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சியில் , தேசிய பாதுகாப்புக்கான முக்கியத்துவம் முதன்மையாக இருந்தது.
2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமரான மோடி , தேசிய பாதுகாப்பில் இன்னும் தீவிரம் காட்டினார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் முறையே உள்துறை, ராணுவத்துறை,வெளியுறவுத்துறை, நிதித்துறை என தத்தம் துறைகளைத் திறம்பட வழிநடத்தினர்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் உள்துறை, இராணுவத் துறை, வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை ஆகும்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். முழு கட்டுப்பாடும் பாஜகவின் பிடியில் இருப்பதால் , நாட்டில் உள்நாட்டு குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு பாஜகவிடம் இருந்தால் தான் .ஒருங்கிணைந்த ஒரு தேசிய பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைபடுத்தவும், நெருக்கடி காலங்களில் விரைவாகவும் திறமையாகவும் முடிவெடுக்கவும் முடியும்.
மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டத்திருத்தங்களை எந்தவித சமரசமும் இல்லாமல் கொண்டுவந்து விரைவாக செயல்படுத்துவதற்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது பாஜகவுக்கு அவசியமாகிறது.
இது மோடியின் உத்தரவாதம் என்று பிரதமர் மோடி தந்திருக்கிற உத்தரவாதங்களை நிறைவேற்றவும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு பாஜக வசம் இருப்பதே சரியானதாக இருக்கும்.
எனவே தான் முக்கியமான இந்த நான்கு துறைகளையும் தற்போது பாஜகவே வைத்துக்கொண்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.