கர்நாடகாவில் இளைஞரை கொலை செய்த வழக்கில், பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணி தகவல்களை பார்க்கலாம்…!
தமிழில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான வல்லரசு திரைப்படத்தில், போலீசாக வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களாக நடித்த நான்கு பேரில் ஒருவராக வந்தவர் தான் இந்த தர்ஷன்.
கன்னட நடிகர் தூகுதீப சீனிவாஸின் மகனான தர்ஷன், 1997ம் ஆண்டு வெளியான மகாபாரதா என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மெஜஸ்டிக் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகராக அறியப்பட்டார். நடிகரான தர்ஷன் தயாரிப்பாளராகவும் இருந்து பல திரைப்படங்களை விநியோகமும் செய்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான புல்புல், பிருந்தாவன, க்ராந்தி, ராபர்ட் ,குருஷேத்திரா உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தன.
இன்னும் சொல்லப்போனால் , அஜித் நடித்து தமிழில் வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தை, ‘ஒடியா’ என்னும் பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்ததோடு, அப்படத்தில் தானே நடித்திருந்தார். தமிழில் கனா என்ற படத்தில் நடித்திருந்தார்.
இரு நாட்களுக்கு முன், பெங்களூருவின், சுமனஹள்ளி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். பெங்களூருவின் சித்ரதுர்கா பகுதியில் உள்ள மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வந்த ரேணுகா சுவாமி என்பதும், அவருக்கு சமீபத்தில் தான் திருணம் ஆகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைவழக்கில் , கைது செய்யப்பட்ட 3 பேரும், நடிகர் தர்ஷன் சொல்லித்தான் ரேணுகா சுவாமியைக் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மைசூரில் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த நடிகர் தர்ஷனைக் கைது செய்த காவல்துறையினர், அவருடன் அவரது காதலியையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள காவல் துறையினர், நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டிலிருந்து பல தரப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.
ஒரு கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டிருப்பதால், அவரது வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, ‘இந்தக்கொலை வழக்கில் விசாரணையின் முடிவில் தர்ஷனுக்கு தொடர்புள்ளதா?இல்லையா? என்பது தெரியவரும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை தனது தாயிடம் தொலைபேசியில் பேசிய ரேணுகா சுவாமி, மதிய உணவுக்கு வீட்டுக்கு வரவில்லை என்றும், சில நபர்களுடன் மதிய உணவுக்குப் போகிறேன் என்றும் கூறிய நிலையில் மாயமானார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றே அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்றும், கொலை செய்தவர்கள் உடலை வாய்க்காலில் வீசி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. ரேணுகா சுவாமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது,அதை நாய்கள் தின்று கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே திருமணமான நடிகர் தர்ஷனும் நடிகை பவித்ரா கவுடாவும் காதலித்து வந்த நிலையில் , நடிகை பவித்ராவுக்கு, ரேணுகா சுவாமி தகாத குறுஞ் செய்திகள் அனுப்பி வந்ததாகவும் , கோபமடைந்த நடிகர் தர்ஷன் கூலிப் படையை ஏவி ரேணுகா சுவாமியைக் கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011ம் ஆண்டு, தன்னை அடித்து துன்புறுத்தியதாக , நடிகர் தர்ஷன் மீது அவரது மனைவி விஜய லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் , நடிகர் தர்ஷன் சிறையில் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. பிறகு இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது. மீண்டும் 2016 ஆண்டு கணவர் நடிகர் தர்ஷன் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.
இப்படியான நிலையில், கடந்த ஜனவரி மாதம், நடிகை பவித்ரா கவுடா, தனது மகள் குஷி கவுடா மற்றும் தர்ஷனுடன் எடுத்த புகைப்படங்களைத் தனது 10 ஆண்டு கால வாழ்க்கை எனப் பெயரிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
உடனே நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி ,தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கணவரின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு, ‘ இன்னொருவரின் கணவரின் புகைப்படத்தை வெளியிடும் முன் கவனமாக இருக்கவேண்டும் என்றும், திருமணமானவர் என்று தெரிந்தும் தன சொந்த தேவைக்காக பழகுவது தார்மீகமானதா என பவித்ரா கவுடா யோசிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இப்படியாக கொலை வழக்கில் நடிகர் தர்ஷனும் பவித்ரா கவுடாவும் கைதாகி இருப்பது கன்னட திரைப்பட உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.