குவைத்தில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த 45 இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி.அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
குவைத்தில் இயங்கி வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 196 பேர் மங்காப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் ஒரு குடியிருப்பில் சமையல் கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்தது. மளமளவென பரவிய தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
உயிர் பிழைப்பதற்காக பலர் மாடிகளில் இருந்து குதித்தனர்.இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தோரின் உடல்களை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டது. மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் விரைந்தார்.
இதனையடுத்து இந்திய விமாப்படை விமானம் மூலம் இந்தியர்கள் 45 பேரின் உடல்கள் குவைத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமானத்தில் மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கும் பயணம் செய்தார்.
கொச்சி விமான நிலையம் வந்தடைந்த உடல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஆம்பூலன்ஸ் மூலம் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக்கொண்டார்.