“பரபரப்புக்காக தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய இணை அமைச்சராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்ட எல்.முருகன், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் மேளதாளத்தோடு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும், 5 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்,
“இரண்டாவது முறையாக தமிழகத்தின் பிரதிநிதியாக வாய்ப்பு கொடுத்துள்ளதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
மேலும், “தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் மோடி அளித்துள்ளார்” எனவும், “தமிழ் மொழி, கலாச்சாரம் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை பிரதமர் மோடியை சாரும்” எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், “பரபரப்புக்காக தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்றும் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். அப்போது, அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியணைத்து வரவேற்றார். அவருடன் பாஜக தொண்டர்களும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.