வங்கக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையின் அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை கைது செய்வதையே இலங்கை கடற்படை தொழிலாக வைத்திருக்கிறது என சாடியுள்ள அவர், இலங்கை கடற்படையின் அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
வரும் 20ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை அவர்களின் படகுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.