பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
உலகின் முதல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான நாளந்தா பல்கலைக்கழகம், பீகாரில் உள்ள ராஜ்கிருதம் பிரதேசத்தில், தலைநகர் பாட்னாவுக்கு தென் மேற்கே, 95 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மகத பேரரசின் காலத்தில், இரண்டாம் சந்திரகுப்தரின் மகனான, ஒன்றாம் குமார குப்தரால், கிபி 5 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை “மகாவிஹாரா” என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கின்றனர்.
சிறந்த கல்வி நிறுவனமாக மட்டுமில்லாமல் சிறந்த புத்த மடாலயமாகவும் நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்திருக்கிறது. உலகின் முதல் உறைவிட பல்கலைக்கழகமாகவும், உலகின் முதல் சர்வதேச பல்கலைக்கழகமாகவும் நாளந்தா விளங்கியது.
புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங், இந்தப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து பாடம் கற்றுள்ளார். தனது பயணக் குறிப்புக்களில், யுவான் சுவாங், நாளந்தாவில் 10,000க்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் 2000க்கும் ஆசிரியர்கள் இருந்ததாகவும்,சீனா,திபெத்,கொரியா, இந்தோனேசியா,பெர்சியா, துருக்கி மத்திய ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், தங்கியிருந்து கல்வி கற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு தனித்தனி பாட சாலை வளாகங்கள், 10 கோவில்கள், பல தியான மண்டபங்கள், வெவ்வேறு பாடங்களுக்கான தனித் தனி வகுப்பறைகள், 3 ஒன்பது அடுக்கு நூலகங்கள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில், பல லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் இருந்தன.
கி.பி 1193ம் ஆண்டில் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் முதன்மை படைத் தலைவரான பக்தியார் கில்ஜியால் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆயுர்வேதத்தின் அனைத்து அறிவையும் அழிக்கவும், இந்து மற்றும் புத்த மதத்தை அழித்து இஸ்லாத்தை நிலைநாட்டவும் நாளந்தாவை அழித்த கில்ஜி, சுமார் 90 லட்சம் ஓலைசுவடிகள் மற்றும் கைப்பிரதிகள் இருந்த நாளந்தாவின் நூலகங்களுக்குத் தீ வைத்தார். மேலும் அறிஞர்களிடமிருந்து பண்டைய வேத அறிவு பிறருக்கு செல்வதை விரும்பாத கில்ஜி நாளந்தாவில் வசித்துவந்த அனைத்து துறவிகளையும் அறிஞர்களையும் கொன்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பேரழிவுக்குப் பின் 1812ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நில அளவையாளர், பிரான்சிஸ் புக்கனன்-ஹாமில்டனால் நாளந்தா மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1861ல் சர் அலெக்சாண்டர் கன்னிங்காம் பண்டைய பல்கலைக்கழகம் நாளந்தா தான் இது என்று அடையாளம் காட்டினார்.
1915ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியின் போது 11 மடாலயங்களும்,6 செங்கல் கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும், பழங்கால நாணயங்கள்,செப்பேடுகள்,நித்திரைகள்,சிற்பங்கள் போன்ற பல்வேறு அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. எனவே 1980 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக நாளந்தா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது.
நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுமலர்ச்சி 2006ம் ஆண்டில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முயற்சியில், அப்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரையின் பேரில், 2010 ஆம் ஆண்டு, நாளந்தா பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பீகார் மாநில அரசு நாளந்தாவின் புதிய வளாகத்திற்கு 455 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவின் முதல் தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இருந்தார்.
பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பத்ம விபூஷன் மறைந்த பி.வி. தோஷி வடிவமைத்திருக்கிறார். பழங்கால வாஸ்து கொள்கைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடக்கலையை இணைத்து, பசுமையான 100 ஏக்கர் நீர்நிலைகளுடன் zero carbon-யை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 6.5-MW DC -grid solar panel , 500-KLD நீர் சுத்திகரிப்பு நிலையம், 400-KLD நீர் மறுசுழற்சி மையம் மற்றும் ஒரு புதுமையான 1.2-MW AC பயோகேஸ் அடிப்படையிலான கழிவு-ஆற்றல் ஆலையும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 1,900 மாணவர்கள் தங்கக்கூடிய 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வித் தொகுதிகள், இரண்டு நிர்வாகத் தொகுதிகள், 300-க்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய அரங்குகள் மற்றும் 550 மாணவர்கள் தங்கும் விடுதிகள், மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த வசதிகளுடன் கூடிய பிரத்யேக குடியிருப்புப் பகுதிகள் இந்த வளாகத்தில் உள்ளன.
மேலும், ஒரு விருந்தினர் மாளிகை, ஒரு சர்வதேச மையம், 1,000 பேர் அமரக்கூடிய ஒரு சாப்பாட்டு கூடம், 2,000 பேர் அமரக்கூடிய ஒரு பிரத்யேக தியேட்டர் மற்றும் விளையாட்டு வளாகம், மருத்துவ மையம், வணிக மையம் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வுநேர அறைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ளன.
ஹர்ஷவர்தனா, நாகார்ஜுனா, வசுபந்து போன்ற சிறந்த அறிஞர்களை உருவாக்கிய இந்த நாளந்தா பல்கலைக்கழகம் 800 வருட பாரம்பரியத்தின் அடையாளமாக இன்றும் விளங்குகிறது.
உலகத்துக்கு zero வைக் கண்டுபிடித்து தந்த சிறந்த கணித அறிஞரான ஆரியபட்டர் தலைவராக இருந்த , இந்த நாளந்தா மீண்டும் புத்துயிர் அடைந்திருப்பது உலக கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.