தமிழகத்தில் விஷச்சாராயத்தை கட்டுப்படுத்த கடந்த ஓராண்டாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுப்பதில் தமிழக அரசு, காவல்துறை, வருவாய் துறை, மதுவிலக்கு துறை தோல்வி அடைந்துவிட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜராகி, கள்ளச்சாராய விற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடந்த ஒரு வருடமாக விஷச்சாராயத்தை கட்டுப்படுத்த அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்கு எந்த அதிகாரிகள் பொறுப்பு? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மரக்காணம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கடந்த ஓராண்டாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன்26 ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.