சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பானி பூரி பிடிக்காதவர்கள் சாப்பிடாதவர்கள் இந்தியாவில் உண்டா என்ன? வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவாக இருந்தாலும் , இந்தியா முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிறியவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பானி பூரி ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
உருளைக் கிழங்கு, புளி, வெங்காயம், கொண்டை கடலை மற்றும் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் பானி பூரி உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கேள்வி எப்போதுமே எழுவதுண்டு. பானி பூரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது.
கர்நாடகாவில் தெருவோரங்களில் விற்கப்படும் பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளின் தரம் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 260 பானி பூரி மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் பல அதிர்ச்சியான முடிவுகள் வெளிவந்துள்ளன.
சோதனை செய்யப்பட்ட பானி பூரிகளில் 22 சதவீதம் உண்பதற்கான தரத்தை மீறியுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
260 பானி பூரிகளில் 41 மாதிரி பானி பூரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்று நோயை உருவாக்கும் வேதிப் பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் 18 மாதிரி பானி பூரிகள் மனிதர்கள் உண்பதற்குத் தகுதியற்றவை என்றும், அவற்றில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பானி பூரி வியாபாரிகள், தரமற்ற மற்றும் புற்று நோய் உருவாக்கும் செயற்கை நிறங்களைச் சேர்ப்பது கண்டறிய பட்டால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரித்து இருக்கிறார்.
பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் பாதுகாப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, ஷவர்மா மாதிரிகளில் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப் பட்ட 17 ஷவர்மா மாதிரிகளில் 8 மாதிரிகள் தரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே, கர்நாடக அரசு கோபி மஞ்சூரியான், மற்றும் பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரோடமின் பி என்னும் வேதிப்பொருளுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத் தக்கது.