டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
டெல்லியில் முகாமிட்ட சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே பிரதமர் மோடியை சந்தித்து, ஆந்திரத்தின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த குறுகிய கால நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சந்திரபாபு நாயுடு, பட்ஜெட்டில் ஆந்திரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.