இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்செர்வேட்டிவ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது.14 ஆண்டுகளுக்குப் பிறகு, கியர் ஸ்டோர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்திருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கணிப்புக்கள் எல்லாம், பல வாரங்களாகவே தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 410 முதல் 431 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும் பெரும்பான்மையைப் பெறும் என்று கணித்திருந்தனர். இந்த கருத்துக் கணிப்புகள் இப்போது உண்மையாகி இருக்கிறது.
உலகின் 6-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் பிரிட்டனில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி பொது தேர்தல் நடை பெற்றது. மொத்தம் 46 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள இங்கிலாந்தில் சுமார் 40,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. 98 வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4,515 வேட்பாளர்கள் பிரிட்டன் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். அவர்களில் 459 பேர் சுயேச்சைகளாக களம் கண்டனர். போட்டியிட்டவர்களில் 30 சதவீத வேட்பாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு எல்லைகள் மாற்றப்பட்டன. அதன் பிறகு நடக்கும் முதல் தேர்தலாகவும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின் நடக்கும் முதல் தேர்தலாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் கலைப்பு உரிமை சட்டம் நிறைவேற்றப் பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தலாகவும் இந்த தேர்தல் இருந்தது.
பிரிட்டனில் ஹவுஸ் ஆப் காமன்ஸ் என்று அழைக்கப்படும் கீழவையின் 650 இடங்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. பிரிட்டனில் ஆட்சி அமைக்க தேவையான 326 இடங்களுக்கு மேல் பெற்று தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
2019ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நடந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையில் கன்செர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, தொழிலாளர் கட்சி 202 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது.
14 ஆண்டுகளாக அரசு அதிகாரத்தைத் தக்க வைத்திருந்த பிரதமர் ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி இந்த தேர்தலில் படு தோல்வி அடைந்திருக்கிறது.
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, மத்திய லண்டனில் உள்ள மக்கள் கூட்டத்தில் பேசிய பிரிட்டனின் புதிய பிரதமரும் தொழிலாளர் கட்சித் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், நான்கரை ஆண்டுகள் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த வெற்றி என்றும், இங்கிலாந்து மக்களுக்குச் சேவை செய்யவும் பிரிட்டனை மீட்டெடுக்கவும் பணி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து “மாற்றத்துக்குத் தயாராக உள்ளது” என்றும், மாற்றம் இங்கே தொடங்குகிறது என்றும் குறிப்பிட்ட கெய்ர் ஸ்டார்மர், இது இங்கிலாந்து மக்களின் ஜனநாயகம் என்றும் இது இங்கிலாந்தின் எதிர்காலம் என்றும் கூறியிருக்கிறார்.
2015ம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான கெய்ர் ஸ்டார்மர், 2020 ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவரானார். தனது சாதுர்யத்தால், தனது கட்சியை நாட்டின் அரசியல் மையத்தை நோக்கி நகர்த்தினார் என்று தான் சொல்லவேண்டும்.
2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோசமான தோல்விக்குப் பிறகு தொழிலாளர் கட்சியின் அதிர்ஷ்டத்தை மாற்றி அமைத்திருக்கிறார் கெயர் ஸ்டார்மர்.
இங்கிலாந்தில் வாழ் இந்தியர்களுடன் நல்ல உறவுகளைவளர்த்துக் கொண்ட கெயர் ஸ்டார்மர், முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பினின் காஷ்மீர் மீதான பார்வையைத் திருத்தி அமைத்தார். இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்றும், எனவே காஷ்மீரில் அந்நிய நாடுகள் உரிமை கொண்டாட முடியாது என்ற கொள்கையை உறுதியாக எடுத்த்துரைத்தார். மேலும் இந்தியவிரோத நிலைப்பாட்டை தொழிலாளர் கட்சியில் இருந்து துடைத்தெறிந்தார்.
இது மட்டுமில்லாமல், சர்வ தேசப் பாதுகாப்பு, காலநிலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் அடிப்படையில் இந்தியாவுடன் வலிமையான உறவை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கெய்ர் ஸ்டார்மர் தனது கட்சியின் சார்பில் உருவாக்கிய 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் ராணுவம் கல்வி, தொழில்நுட்பம், வர்த்தகம் போன்ற துறைகளில் ஆழமான புரிந்துணர்வுடன் தொழிலாளர் கட்சி செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு லண்டனில் உள்ள கிங்ஸ்பரியில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்குச் சென்று வழிபட்ட கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டனில் மதவெறிக்கு துளியும் இடமில்லை என்று உறுதியளித்திருந்தார். இவையெல்லாம், வரலாறு காணாத வெற்றியை கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்குப் பெற்று தந்திருக்கிறது.
இதற்கிடையே, ரிஷி சுனக்கின் ஆட்சியில் நிலவிய நிர்வாகச் சீர்கேடுகள், நிதி நெருக்கடிகள், மற்றும் கட்சியின் மீது ஏற்பட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. அவற்றை தாண்டி, ரிஷி சுனக்கால் இங்கிலாந்து மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை என்று தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஐரோப்பாவில் ஒரு வலதுசாரி எழுச்சிக்கு மத்தியில் கெய்ர் ஸ்டார்மரும் வலதுசாரி வழியில் நடந்தே வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.