17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்ததால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த கேப்டன் ரோகித் ஷர்மா, தமது எக்ஸ் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஜூன் 29-ஆம் தேதி… மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படோஸ் மைதானத்தில் ரோபோ போல் நடந்து வந்து உலகக்கோப்பையை ரோகித் ஷர்மா வாங்கிய நேரத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் தெருக்களில் கொண்டாடி தீர்த்தனர்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உலகக்கோப்பை… 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை… அதுவும் தோல்வியையே சந்திக்காமல் ஓர் அணி வாங்கிய முதல் உலகக்கோப்பை… இதில் ஏதாவது ஒரு காரணம் இருந்தாலே இந்திய கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்களையும் கையில் பிடிக்க முடியாது… மூன்றும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்???
கொண்டாட்டங்களைப் போல இந்திய வீரர்களின் உணர்ச்சிமிகு தருணங்களும் முக்கியமானவை. இறுதிப்போட்டியில் வென்றபோது இந்திய வீரர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்ததை யாராலும் மறக்க முடியாது.
சக வீரர்களைப் போலவே உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்த கேப்டன் ரோகித் ஷர்மா, பார்படோஸ் மைதான பிட்சின் மண்ணை சிறிதளவு எடுத்து தமது வாயில் போட்டுக்கொண்டார். இந்த பிட்ச்-தான் எங்களுக்கு கோப்பையை கொடுத்திருக்கிறது என தமது செயலுக்கான காரணத்தை கூறினார். மேலும் பார்படோஸ் மைதானத்தில் இந்திய தேசியக் கொடியை நட்டு தமது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
உலகக்கோப்பையுடன் இந்தியாவுக்கு வந்த வீரர்களை வரவேற்க லட்சக்கணக்கானோர் திரண்டதை நம்மால் மறக்க முடியாது. கேப்டன் ரோகித் ஷர்மாவும் அவரது அணியினரும் மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே சென்ற காட்சிகள் கல்வெட்டுப் போன்றவை.
இப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த ரோகித் ஷர்மா தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பார்படோஸ் மைதானத்தில் இந்திய தேசியக் கொடியை நட்ட புகைப்படத்தை தமது எக்ஸ் தள பக்கத்தின் PROFILE PICTURE-ஆக ரோகித் ஷர்மா வைத்ததே அதற்கு காரணம்.
ஏனென்றால் அந்த புகைப்படத்தில் இந்திய தேசியக்கொடி மண்ணில் படுகிறது. 1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட NATIONAL HONOUR ACT-ன்படி தேசியக்கொடியை மண்ணிலோ, தண்ணீரிலோ படும்படி வைக்கக்கூடாது. எனவே ரோகித் ஷர்மாவின் தவறை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசியக்கொடியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் ரோகித் இவ்வாறு செய்திருக்கமாட்டார் என்றாலும், இது தவறு என்று அவர்கள் கூறியுள்ளனர்.