அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக நடத்தினார்? என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்…..
பென்சில்வேனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்த ட்ரம்ப், தமது உரையைத் தொடங்கினார். அடுத்த ஆறாவது நிமிடத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. ஒரு நொடி தமது வலது காதை தொட்டுப் பார்த்த ட்ரம்ப், திடீரென கீழே குனிந்து தரையில் பதுங்கினார். உடனடியாக அவரை பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அதன் பிறகும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்ததால் சுமார் 25 விநாடிகள் ட்ரம்ப்பை சுற்றி அரண் அமைத்தது போல் பாதுகாவலர்கள் நின்றனர். அதனைத் தொடர்ந்து ட்ரம்ப்பை அவர்கள் காருக்கு தூக்கிச் சென்றனர். அப்போது தமது காலணிகளை எடுத்துக்கொள்வதாக ட்ரம்ப் கூறினார். குண்டு துளைத்ததால் அவரது காதில் இருந்து புறப்பட்ட ரத்தம் கன்னத்தில் வழிந்தது. அதோடு ஆதரவாளர்களைப் பார்த்து FIGHT FIGHT என ஆக்ரோஷமாக கையை உயர்த்தியபடியே கூறினார் ட்ரம்ப்.
பின்னர் அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் பார்வையாளர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிகழ்வு குறித்து அமெரிக்க ரகசிய சேவை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு வெளியே, உயரமான இடத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நிகழ்த்தியது 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்றும், பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்தவர் எனவும் FBI கூறியுள்ளது. எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் அதிபரான ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகே துப்பாக்கியுடன் ஒருவரால் எப்படி வர முடிந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேடையிலிருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் கொலையாளி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே உள்ள கட்டடத்தின் மீது ஒருவர் ஏறுவதைப் பற்றி பாதுகாவலர்களை தாம் எச்சரித்ததாகவும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், முன் எப்போதையும் விட இந்த தருணத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அமெரிக்கர்கள் வலிமையானவர்கள், உறுதியானவர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல் தமது நண்பரும் முன்னாள் அதிபருமான ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள அவர், ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஆர்பன், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















