மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயரே இல்லை என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும் அனைத்து மாநிலங்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பதும் அவை நிறைவேறாமல் போகும்போது அரசாங்கத்தை குறை சொல்வதும் வழக்கம்தான். அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என அண்ணா காலத்தில் இருந்தே கூறி வருகின்றனர்.
அப்படி இம்முறையும் விமர்சனங்களை முன்வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒருபடி மேலே போய் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை, அதனால் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்றார். தமிழகத்தைப் போலவே கர்நாடகம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதால், அந்த மாநிலத்துக்கு அரசின் திட்டம் செல்லாது என்று அர்த்தமல்ல எனக்கூறினார். அனைத்து பட்ஜெட்டிலும் எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட முடியாது என்பது நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட் மட்டுமின்றி நிதி ஒதுக்கீட்டிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக அவ்வப்போது புகார் எழும். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அத்தகைய குரல் எழும் போதெல்லாம் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு சரிசமமாக நிதியை பகிர்ந்தளிக்கிறதா என புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்படும்.
அப்படி இம்முறை வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டைப் பற்றியது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயரே இல்லை என மு.க.ஸ்டாலின் கூறும் நிலையில், அவரது தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, தஞ்சை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 27 மாவட்டங்களின் பெயரே இல்லை. முதலமைச்சர் கூற்றுடன் இதை ஒப்பிட்டால், இந்த 27 மாவட்டங்களையும் தமிழக அரசு புறக்கணித்துவிட்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மற்றொருபுறம் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தாக்கல் செய்யப்பட்ட 6 நிதிநிலை அறிக்கைகளில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அதே போல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 8 ஆயிரத்து 54 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை அறிவித்ததாகவும், 2014 முதல் 2024 வரையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்குமான வார்த்தைப் போராக மாறியிருக்கிறது மத்திய பட்ஜெட்.