காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மொடக்குறிச்சி, காங்கேயம் பாளையம், நஞ்சை காளமங்கலம், கொடுமுடி ஆகிய ஒன்றியங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றின் பகுதியில் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் தற்காலிக மண் பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது.
பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் இரு கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் பாலம் சேதமடைந்ததால் தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பேச்சிப்பாறையில் திறக்கப்பட்ட உபரி நீரால் தற்காலிக மண் பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டதால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நீலகிரியில் உள்ள பைக்கார அணை முழு கொள்ளளவை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 110 அடி உயரம் கொண்ட பைக்கார அணை நிரம்பியது.
அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாயார் ஆற்றில் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.