ராமேஸ்வரம் மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான இலங்கை கடற்படைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருவதாகவும் தற்போது தமிழக மீனவரின் படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் வேண்டுமென்றே மோதி தமிழக மீனவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், அவர்களில் மலைச்சாமி என்ற மீனவர் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்துள்ளதாகவும் ராமசந்திரன் என்ற மீனவர் இன்னும் மீட்கப்படவில்லை என்ற செய்தி வருத்தமளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் இந்த செயல் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், இதுகுறித்து இலங்கை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.