சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி சைலேஷ் குமார் காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஏ.கே.விஸ்வநாதன் ஒய்வுபெற்ற நிலையில், அவர் பொறுப்பு வகித்த பதவியை சைலேஷ் குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் பிரிவு ஐஜி தினகரன், சைலேஷ் குமார் வகித்து வந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு மண்டல ஐஜியாக செந்திகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல் தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,
ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக மேகேந்தர் குமார் ரத்தோட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நஜ்முல் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடசென்னை சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார், ரயில்வே டிஐஜியாக அபிஷேக் தீக்ஷித் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சரக டிஐஜியாக அபினவ் குமார், காவலர் நலவாழ்வு தலைமையிட டிஐஜியாக துரை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சரக டிஐஜியாக தேவராணி, சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக சரோஜ் குமார் தாக்கூர், காவல் தலைமையிட ஐ.ஜியாக சாமூண்டிவரி ஆகியோரை புதிய பொறுப்புக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.