வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு மட்டுமல்லாது மீட்பு பணியாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு மொழிகளில் மனநல ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் வீனா ஜார்ஜ், சுகாதாரத் துறையின் அனுமதியின்றி யாரும் முகாம்களுக்குள் நுழைந்து ஆலோசனை வழங்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.