விளையாட்டு வீரர்களின் உடல் எடை கூடினால், அதற்கு மருத்துவக் குழு பொறுப்பல்ல என இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதக்க வாய்ப்பை நழுவ விட்டார். இதைத்தொடர்ந்து, ஒலிம்பிக் மருத்துவக் குழு மீது பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷா, மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் எடையை பராமரிப்பதில் அவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்தான் பொறுப்பு உள்ளதாக கூறினார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டதாக கூறிய அவர், வீரர்கள் களத்தில் காயமடைந்தால் அதற்கு சிகிச்சையளிப்பதுதான் அக்குழுவின் பணி என்றும் விளக்கமளித்தார்.
பெரும்பாலான தடகள வீரர்கள் தங்களுக்கென பிரத்யேகமாக ஊட்டச்சத்து நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகளை வைத்திருப்பதாகவும், எடை கூடினால் அதற்கு அவர்களும் காரணம் என்றும் பி.டி. உஷா கூறினார்.