சிவகங்கை அருகே கஞ்சா கடத்திய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், மேலும் இருவரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் கடந்த 17ஆம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது ரவுடி அகிலனை தவிர மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர்.
மேலும், ரவுடி அகிலனும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது அவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ரவுடி அகிலன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மறவமங்கலம் பெரியகண்மாய் பகுதியில் பதுங்கியிருந்த நிதிஷ்குமார், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிதிஷ்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.