இந்துக்களின் வாக்குகள் பாஜகவிற்கு சென்று விடும் என்ற பயத்தில், தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே வேல் யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றார்.
தமிழகத்தில் மெட்ரோ திட்டத்திற்கான முறையான ஆவணங்களை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என்றும், உரிய ஆவணங்கள் வழங்கிய பின்னர் நிதி தொடர்பான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் என எல்.முருகன் தெரிவித்தார்.