கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 30 மடங்கு கூடியுள்ளது. 2024-2025 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியாவின் இராணுவ ஏற்றுமதி சுமார் 78 சதவீதம் உயர்ந்துள்ளதாக ராணுவத் துறை தெரிவித்திருக்கிறது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யா-உக்ரைன் போர் , இஸ்ரேல்-ஹமாஸ் போர் என சர்வதேச அளவில் போர் சூழல் நிலவிவரும் நிலையில் பல நாடுகள் ராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
வளர்ந்த நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள் வரை தங்கள் ராணுவப் பலத்தை நவீனமயமாக்கி வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் ராணுவத் தளவாடங்கள் அதிநவீன ஆயுதங்களின் தேவைகள் கூடியுள்ளன.
இந்தச் சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு 35,000 கோடி ரூபாய்க்கான விண்வெளி மற்றும் இராணுவத் துறைக்கான ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்தது. அதன்படி 2025ம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கான திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
வெடிமருந்துகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் மற்றும் அதிநவீன தலைக் கவசங்கள், ராணுவத்துக்கு தேவையான மின்னணு பொருட்கள், கவச வாகனங்கள், இலகுரக TURBO ENGINES, ட்ரோன்கள் மற்றும் வேகமாக தாக்க கூடிய வாகனங்கள் என ஏராளமான ராணுவத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
நீண்ட காலமாகவே மியான்மர் இந்தியாவிலிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குகிறது. எனினும் தற்போது, இஸ்ரேலும் ஆர்மேனியாவும் இந்திய ராணுவப் பொருட்களை வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
ட்ரோன்கள், வெடிமருந்துகளுடன் சிறிய ஆயுதங்களையும் இஸ்ரேல் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடமிருந்து பிலிப்பைன்ஸ் வாங்கி இருக்கிறது.
இந்திய பாதுகாப்புப் பொருட்களின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்காவே உள்ளது. இது இந்தியாவின் மொத்த பாதுகாப்புப் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 50 சதவிகிதம் ஆகும்.
2016ம் ஆண்டு, அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான போயிங் மற்றும் டாடா குழுமம் ஹைதராபாத்தில் Tata Boeing Aerospace Ltd (TBAL) என்ற அமைப்பை 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் தொடங்கியது.
இந்த நிறுவனம் போயிங் AH-64 Apache ஹெலிகாப்டர்களுக்கான கட்டமைப்புக்களைத் தயாரிக்கிறது. இந்த வகை ஹெலிகாப்டர்களுக்கான முதன்மையான இயந்திரங்கள், இறக்கைகள் அல்லது வால்பகுதி அல்லாத பகுதிகள் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது.
இதுவரை 200 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும்,போயிங் 737 குடும்ப விமானங்களுக்கான பிற பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளது இந்த நிறுவனம்.
டாடாவைத் தவிர,பெங்களூரைச் சேர்ந்த டைனமேடிக் டெக்னாலஜிஸ் மற்றும் ரோசல் டெக்சிஸ் நிறுவனம், SASMOS HET டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களும் ஏராளமான ராணுவ ஆயுத உதிரி பாகங்களை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
அரசு நடத்தும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனங்களும் பாதுகாப்புக்கு தேவையான மின்னணு பொருட்களையும் ஏற்றுமதிக்காக தயாரிக்கின்றன.
அமெரிக்காவின் இன்னொரு பெரிய பாதுகாப்பு நிறுவனம் லாக்ஹீட் மார்ட்டின் ஆகும். இந்த நிறுவனமும் டாடாவுடன் இணைந்து, C-130J போக்குவரத்து விமானங்களுக்காக 200 க்கும் மேற்பட்ட விமானங்களின் பின் பகுதியைத் தயாரிக்கிறது.
மேலும் இந்த நிறுவனமே S-92 ஹெலிகாப்டர் கேபின் உதிரிபாகங்களின் உலகின் ஒரே தயாரிப்பாளராகும், இதுவரை 157 கேபின்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.
போர் விமான இறக்கைகள் மட்டுமன்றி இந்தியாவிலிருந்து பல இராணுவ தளவாடங்களையும் உதிரி பாகங்களையும் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் மஹிந்திரா மற்றும் கல்யாணி போன்ற நிறுவனங்கள் ஆர்மேனியாவுக்கு பீரங்கித் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்கின்றன.
பெங்களூருவை சேர்ந்த ட இந்தோ-எம்ஐஎம் என்ற நிறுவனம் MIM எனப்படும் மோல்டிங் உதிரி பாகங்கள் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய பொதுத்துறை நிறுவனங்களும், பல்வேறு ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன.
குறிப்பாக, ஆயுதத் தொழிற்சாலை வாரியம் (OFB), கடந்தாண்டு மட்டும் 1,726 கோடி ரூபாய் மதிப்புள்ள வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருக்கிறது.
அண்மைக்காலமாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பசிபிக் நாடுகள் தங்களின் ராணுவத்தை மேம்படுத்தி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் ராணுவத் தளவாடங்கள் மிகவும் விலை அதிகம் என்பதால் இந்த நாடுகள் மலிவான விலையில் தரமான தயாரிப்புகளை இந்தியாவில் இருந்து வாங்குகின்றன. குறிப்பாக இந்த நாடுகளுக்கு வேகமான ரோந்து கப்பல்களை தயாரித்து இந்தியா வழங்கி வருகிறது.
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.