பூலித்தேவரின் வீரம் நிறைந்த வாழ்க்கையை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாய் திகழ்ந்தவரும், முதல் முதலாக “வெள்ளையனே வெளியேறு” என்று கம்பீர முழக்கமிட்டவருமான அய்யா மாவீரர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையாகக் கொண்டு செயல்பட்டவர், மாவீரர் ஒண்டிவீரன் முதலான வீரம் கொண்ட பெரும் படையோடு, துணிச்சலுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வந்தார்.
தேசம் ஆண்ட வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார். வரலாறு நெடுகவும் மாவீரர்கள் பலரையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தனித்துவம் மிக்க முன்னோடியான, அய்யா மாவீரர் பூலித்தேவர் பிறந்த நாளான இன்று, அவரது வீரம் நிறைந்த வாழ்க்கையை போற்றி வணங்குவோம் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.