நாரி சக்திக்கு எடுத்துக்காட்டாக கணவரை இழந்தும், இந்திய ராணுவத்தில் அவரது வெற்றிடத்தை பூர்த்தி செய்ய புதிதாக பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் யஸ்வினி மற்றும் லெப்டினன்ட் உஷா ராணி ஆகியோரின் துணிச்சலை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு :
இந்தியாவில் பெண் சக்தி என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டின் குடியரசுத் தலைவர் முதல், வீட்டின் குடும்பத் தலைவி வரை என பெண்களுக்கான முக்கியத்துவத்தை மையமாக கொண்டு, பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் மத்திய அரசு நாரி சக்தி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி, தேசத்தின் பெருமைமிகு பணியான ராணுவப் பணியை துணிச்சலுடன் தேர்வு செய்யும் பெண்களின் பின்னால் இருக்கும் ஒவ்வொரு கதைகளும், கண்ணீரும், உணர்ச்சியும் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஓராண்டு கால கடுமையான பயிற்சிக்கு பிறகு, லெப்டினன்ட் அதிகாரிகளாக பொறுப்பேற்றுள்ள யஷ்வினி தாக்கா மற்றும் உஷா ராணி ஆகியோரின் கதைகள், உங்களுக்கும் மனதை உருகச் செய்யும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் 8 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் கருப்பு நாள் மட்டுமல்ல, இந்தியாவின் கருப்பு நாளாக மாறியது. முப்படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத், கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம், குன்னூர் வெல்லிங்டனில் உள்ள ராணுவ தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணித்து கொண்டிருந்த போது, காட்டேரி அருகே எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் தான் லெப்டினன்ட் யஷ்வினியின் வாழ்க்கையும் திருத்தி எழுதப்பட்டது.
பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரை சூலூர் விமான தளத்தில் இருந்து இயக்கியவர் தான் பைலட் குல்தீப் சிங். சூலூர் விமான தளத்தில் MI – 17V5 பலதரப்பட்ட ரக ஹெலிகாப்டரை இயக்கி வந்த குல்தீப் சிங்கிற்கு, விமானப் படையில் சூலூர் ஈரோவில்தான் முதல் போஸ்டிங் கிடைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், குல்தீப் சிங்கிற்கும், யஸ்வினி தாகாவிற்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள பனாஸ்தலி பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற யஸ்வினியின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.
தந்தை இராணுவ அதிகாரியாக இருந்ததால், கல்லூரி படிப்பின் போதே இரண்டு முறை ராணுவ சீருடையை அணிய நினைத்த யஷ்வினியின் கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் கணவரை பறிகொடுத்த பிறகு, உடைந்து போன அவர் எண்ணற்ற கனவுகளை பறிகொடுத்தார். இருப்பினும் மனம் சளைக்காமல் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யவே, தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் சென்னை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடெமியில் கால் தடம் பதித்தார்.
“நான் அவர் இழப்பை நினைத்து அழ விரும்பவில்லை, அவரது சீருடையை மடித்து வைத்துவிட்டு, அவரைப்பற்றி மட்டுமே தினமும் நினைத்துக்கொண்டு வாழ விரும்பவில்லை. அவரது பெற்றோரும் அவரை நினைத்து வருத்தப்பட கூடாது. அதனால் தான் அவரை பெருமைப்படுத்த நினைத்து, அவர் உயிருடன் இருப்பது போன்ற உணர்வை என் மூலமாக கொடுக்க நினைத்தேன்” என்கிறார் அவர்.
இறப்பை சந்தித்த ராணுவ வீரர்களின் துணைவியார் 36 வயது வரையிலும் ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என்பதை அறிந்து, முறைப்படி தேர்வெழுதி, தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். 26 வயதாகும் யஷ்வினி, தன்னை விட மிகவும் இளம் வயதினருடன் பயிற்சி எடுத்து, தற்போது லெப்டினன்ட் ஆகியிருக்கிறார்.
தனது கணவருக்கான இடத்தை இந்திய ராணுவத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் பூர்த்தி செய்திருக்கிறார் லெப்டினன்ட் யஷ்வினி. தன்னை ஒவ்வொரு தருணத்திலும் தனது கணவர் பார்த்து தற்போது பெருமை கொள்வார் எனவும், அவர் மீதான காதல் எப்போதும் குறையாது எனவும் குளிர்ந்த புன்னகையுடன் கூறுகிறார் லெப்டினன்ட் யஷ்வினி.
யஷ்வினி வாழ்க்கை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் லெப்டினன்ட் உஷா ராணியின் வாழ்க்கை மேலும் நம்மை உணர்ச்சிவசப்பட செய்கிறது. லெப்டினன்ட் உஷா ராணியின் கணவர் கேப்டன் ஜக்தர் சிங். பீகார் மாநிலம் கயாவில் ராணுவக் கல்வி நிலையத்தில் பணியமர்த்தபட்டிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கயா ரயில்நிலையம் அருகே மர்மமான முறையில் சடலமாக கண்டறியப்பட்டார். உயிரிழந்த ஜக்தர் சிங் சடலம் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமணமாகி இரட்டையர்களை பெற்ற பின்னர், கணவர் இறக்க நேர்ந்ததால், இராணுவ பள்ளியில் ஆசிரியராக தொடர்ந்து வந்த உஷா ராணி, தனது குழந்தைகளுக்காகவே இராணுவ அதிகாரியாக முடிவு செய்தார்.
எனது குழந்தைகளை என் குடும்பத்தினர் பார்த்துக் கொள்கிறார்கள், நான் பயிற்சியில் ஈடுபட்ட போது என்னால் முடிந்த முயற்சியை செய்தேன். இரண்டு குழந்தைகளின் தாயாக சொல்கிறேன், என்னால் முடியும் என்றால் யாராலும் இது சாத்தியமாகும். என் கணவர் அணிந்த அதே சீருடையை அணிய விரும்பினேன். எனது குழந்தைகள் கூட என் கணவருக்கு பிறகு, நான் அவரது பெருமையை நிலை நாட்டியிருப்பது குறித்து பெருமிதம் கொள்வார்கள் என்கிறார் அவர்.
கணவர் இல்லாத நிலையிலும், ஒராண்டு கால பயிற்சியை நிறைவு செய்து தற்போது லெப்டினன்ட் அதிகாரிகளாக பொறுப்பேற்றுள்ள உஷாராணி, யஷ்வினி தாக்கர் ஆகியோரின் இந்த சாதனை இந்திய ராணுவத்தில் நாரி சக்தி திட்டத்தின் கீழ் சாத்தியம் ஆகியிருக்கிறது.