மனித குலத்தின் ஆறில் ஒரு பங்கு கொண்ட பாரதத்தின் பெருமையை சர்வதேச அளவில் விஸ்வ குருவாக நிலைநிறுத்திய பாரத பிரதமர் மோடியின் 74 வது பிறந்த நாள் உலகமெங்கும் இன்று கொண்டாடப் படுகிறது. ஒரு எளிய தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே தலைவணங்கும் மாபெரும் தலைவராக திகழும் பிரதமர் மோடியின் சிறப்புக்களைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அனைத்து துறைகளிலும் இந்தியாவின் பாரம்பரியத்தை மீட்டெடுத்த அதே வேளையில் , நவீன பாரதத்தை நிர்மாணித்த சிற்பியாகவும் பிரதமர் மோடி திகழ்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, பழைய பம்பாய் மாநிலத்தில், இன்றைய குஜராத்தில் வடக்கு பகுதி, மெஹ்சானா மாவட்டம் வாட் நகரில் மளிகை கடைக்காரர் குடும்பத்தில், தாமோதர்தாஸ் முல்சந்த் மோடிக்கும் ஹீராபென் மோடிக்கும் 6-வது குழந்தையாக மோடி பிறந்தார்.
அன்றாட வாழ்க்கையைப் பெரும் போராட்டத்தில் கழிக்க வேண்டிய சூழலில் குடும்பம் இருந்த நிலையில்,மோடியின் தந்தை வாட் நகர் ரயில் நிலையத்தில் சிறிய அளவில் ஒரு டீ கடை நடத்தி வந்தார். குழந்தை பருவத்திலேயே, வாட் நகர் இரயில் நிலையத்தில் மோடி டீ விற்று, தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். பிறகு வாட் நகர் பேருந்து நிலையம் அருகே தனது சகோதரருடன் டீ கடை நடத்தி வந்தார் மோடி.
சிறுவயதிலேயே, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது. அந்த உந்துதலில், 8 வயதிலேயே தேசத்துக்காக பணியாற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
உள்ளூர் ஆர்.ஆர்.எஸ் ஷாகா வில் கலந்து கொள்ளத் தொடங்கிய மோடியின் சுறுசுறுப்பும், தேசத்துக்கான அர்ப்பணிப்பும் அவரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்னும் மாணவர் அமைப்பின் தலைவராக்கி அழகு பார்த்தது.
இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பிறகு , தனது மாமா கேண்டீனில் வேலை செய்வதை விட்டு விட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர பிரச்சாரகர் ஆன மோடி, இந்தியாவின் நெருக்கடி காலத்திலும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற கடுமையாக போராடினார்.
தன் அயராத தேசப் பற்றாலும், தன்னலமற்ற சேவையாலும் , மற்றும் கடுமையான உழைப்பாலும், பாஜகவின் உறுப்பினராகி , குறுகிய மாதங்களிலேயே மோடி, கட்சியின் பொதுச்செயலாளரானார்.
1998ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் பதவி ஏற்றப் போது , பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார் மோடி.
தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களுக்கு எல்லாம் பெருமையைத் தேடி தந்த மோடியை, குஜராத் முதல்வராக நியமித்தது பாஜக தேசிய தலைமை. 2001ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி, குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடி, குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்ட கால முதல்வர் என்ற சாதனையை படைத்தார்.
பெண்கல்வி, குடிநீர் வசதி,சாலை மேம்பாடு, பொது சுகாதாரம், விவசாயம்,தொழில் வளர்ச்சி, என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுத்திய மோடி, எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு ஊழலற்ற ஆட்சியை வழங்கினார். முதல் முறையாக குஜராத் மாடல் என்று ஒரு முன் மாதிரியை மோடி இந்தியாவுக்கு வழங்கினார்.
அனைவருக்குமான வளர்ச்சி என்ற உத்தரவாதத்தை முன் வைத்து “மிஷன் 272+ என்பதை சாதித்து காட்டி 2014ம் ஆண்டு நாட்டின் பிரதமரானார் மோடி. அதுவரை காங்கிரசின் பிடியில் இருந்த இந்தியாவை மீட்டு எடுத்து மோடியின் கையில் கொடுத்தனர் மக்கள்.
யாரும் பின் தங்கி விடக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையுடன், ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிரதமர் மோடி ஏழைகளுக்கும், ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேவை செய்வதே தனது அரசின் அடிப்படை நோக்கம் என அறிவித்தார்.
அடிப்படை நிர்வாகம் தவறாக இருந்தால், அரசு கொண்டு வரும் எந்த நல்ல திட்டங்களாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகும். இதை நன்கு அறிந்த பிரதமர் மோடி, முதலில், இந்தியாவின் அடிப்படை நிர்வாக, நிதி சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு, அவை முறைப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமரான மோடி, திடீரென கொரொனா தொற்று நோய் பரவி , உலகையே முடக்கிப் போட்ட கால கட்டத்தில், ஒரு சிறந்த தலைவனாக பொறுமையாகவும் , நிதானமாகவும் , விவேகமாகவும் முடிவெடுத்து, கொரொனாவால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் காப்பற்றினார்.
இந்தியர்களைக் காப்பற்றியது போலவே, பிறநாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்து உதவியது மோடியின் பெருங்கருணை என்று இன்றும் பாராட்டப்படுகிறது.
உலகமே மிக கடுமையான சிக்கல்களை வெவ்வேறு வழிகளில் சந்தித்து கொண்டிருந்த நேரத்தில், ஜி-20 மாநாட்டை நடத்தி மோடியின் தலைமையிலான இந்தியா, புவிசார் அரசியலில் புதிய வரலாறு படைத்தது.
பெரும்பாலான இந்தியர்களின் ஆதரவுடன், 2024ம் ஆண்டு தொடர்ந்து 3 வது முறையாக தேசத்தின் பிரதமரான மோடி, மேலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.
சுய சார்பு பாரதத்தை அமைக்க அயராது பாடுபடும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மென்மையான தேசமாகவும், வலிமையான மற்றும் தன்னம்பிக்கை மிக்க தேசமாகவும் இந்தியாவை மாற்றிக் காட்டியிருக்கிறார்.
அணிசேராத மற்றும் பெரும்பாலும் அடிபணிந்த நிலையில் இருந்த இந்தியாவை, இப்போது சர்வ தேச நாடுகள் உலக அமைதிக்கு உதவுமாறு வேண்டுகின்றன.
இது ஒரு புறம் என்றால் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் 100 நாட்களில், உள்கட்டமைப்பு, விவசாயம், நடுத்தர வர்க்கம், MSMEகள், சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமானப் பாதைகளில் கவனம் செலுத்தி, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா-4 (PMGSY-IV)வின் கீழ், 25,000 இணைக்கப்படாத கிராமங்களில் 62,500 கிலோமீட்டர் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க 49,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் சாலைகளை ஒருங்கிணைந்த நிலையில் வலுப்படுத்த 50 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை முன்னேற்றும் வகையில் 12.33 கோடி விவசாயிகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டு, 12 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில், கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்க மொத்தம் 14,200 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் உட்பட ஏழு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பை ரூ.7 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது. ஊதியம் பெறும் தனிநபர்களுக்கான நிலையான விலக்கு 75,000 ஆயிரம் ரூபாய் ஆகவும், குடும்ப ஓய்வூதியத்திற்கான விலக்கு வரம்பு 25,000 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டித்தரும் திட்டதுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், முத்ரா கடனுக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த ஏஞ்சல் வரி ரத்து செய்யப்பட்டு, விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்காக 1,000 கோடி ரூபாய் மூலதன நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்பு மருந்துகளை டிஜிட்டல் மயமாக்க U-WIN போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மையப்படுத்தப்பட்ட மருத்துவர்களின் களஞ்சியத்தை தேசிய மருத்துவ ஆணையம் தயாரித்து வருகிறது.
5 கோடி பழங்குடியினர் பயன்பெறும் வகையில், 63,000 பழங்குடியின கிராமங்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட பிரதமர் மோடியின் ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான் திட்டத்தின் மூலம் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரமளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் கழிவு அகற்றுபவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் நமஸ்தே திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் பெண்கள் முன்னேறும் வகையில், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தில், 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் 90 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவி குழுக்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர்.
வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா உட்பட அரசு நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்கத்தை மேம்படுத்த பல புதிய சட்டங்களை தனது 3-வது ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடியின் செயல் திட்டங்களால், இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாவதை யாராலும் தடுக்க முடியாது என்று சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சேவகனாக தன்னை பிரகடனம் படுத்திய பிரதமர் மோடி, நாட்டின் விடுதலைக்காக மரணமடையும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், நாட்டுக்காக சேவை செய்யும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக கூறியிருக்கிறார். தமக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக முழு அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
பிரதமர் மோடியின் அயராத உழைப்பால், இந்தியாவுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
கண்டிப்பான நிர்வாகியாகவும், ஒழுக்கம் மிகுந்த தலைவராகவும் விளங்கும் பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரின் இதயத் துடிப்பிலும் தேசப் பற்றை மீண்டும் சேர்த்திருக்கிறார்.