மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்துள்ளதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் நாளை முதல் அவசர சிகிச்சைகளுக்கான பணிக்கு திரும்புவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனினும் தற்போதைக்கு வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தொடங்குவது குறித்த அறிவிப்பு எதையும் அவர்கள் வெளியிடவில்லை. முன்னதாக கொல்கத்தா காவல் ஆணையர், சுகாதார அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.