சென்னை தீவுத் திடலில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக்கோரிய மனுவுக்கு, 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கக்கோரி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் அரசுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தங்களது விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தங்கள் விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை, நடப்பாண்டு கடைகள் ஒதுக்குவது தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களில் இந்த விவகாரத்தை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டார்.