நாடு முழுவதும் பள்ளி அருகே குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை தடை செய்து, கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புகையிலை பறிமுதல் வழக்கில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில், பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது என்று சட்டங்களை இயற்றி கடுமையாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாதாடிய மத்திய அரசு தரப்பு, வழக்கு தொடர்பாக கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இதனை தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பரத் சக்கரவர்த்தி,
முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும், அடுத்ததாக நாடு முழுவதும் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,
புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடுமையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.