லெபனானில் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தீவிர வான்வழித் தாக்குதல்களால், ஹிஸ்பொல்லா 20 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் சுமார் 1,200 கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர்.
ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஹிஸ்புல்லாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருந்த இஸ்ரேல் மக்கள் 60,000 பேருக்கும் மேல் தங்கள் வீடுகளை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கவும் , நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கப் போவதாக கூறியிருந்தார்.
இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாள், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாளாகும்.
இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நடத்தி வரும் இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் நார்தர்ன் அரோஸ்’ என்று பெயரிட்டுள்ளது.
24 மணி நேரத்தில் லெபனானின் 1,300 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் 650க்கும் மேற்பட்ட வான்வெளி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உட்பட குறைந்தது 558 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 1,835 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடப்படாத நிலையில், லெபனானில் 54 மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலால், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி, இஸ்ரேல் தான் மத்திய கிழக்கு பகுதியைப் போருக்குள் இழுக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
எண்ணற்ற குழந்தைகளை அச்சுறுத்தும் ஆபத்தான போர் விரிவாக்கமாக உள்ளது என்று யுனிசெஃப் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கவலையை ஐரோப்பிய ஒன்றியமும் வெளிப்படுத்திருக்கிறது.
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் மிகவும் கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள நிலையில்,உடனடியான போர் நிறுத்தத்துக்குப் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியும் நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.
போரை விரும்பவில்லை என்றும், சமாதானமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ள ஈரானின் அதிபர் Masoud Pezeshkian முழுமையான போரை இஸ்ரேல் உருவாக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதேபோல்,ஜோர்டான்,எகிப்து,துருக்கி, கத்தார்,சவுதி அரேபியா,ஐக்கிய அரபு அமீரகம்,கிரீஸ்,பிரான்ஸ், பெல்ஜியம்,சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளும் , ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம், லெபனானிலும் சிரியாவிலும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி குண்டுவெடிப்புக்கள் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்ததலைவர்கள் உட்பட பல உறுப்பினர்கள் குறிவைத்து இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவுக்குப் பெரும்பின்னடைவைக் கொடுத்துள்ளதாக அமெரிக்க உளவு மற்றும் அரசு அதிகாரிகள் நம்புகின்றனர்.
தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான லெபனான் நாடு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ சால்ட்மார்ஷ் தெரிவித்துள்ளார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையிலிருந்து மக்கள் வெளியேறும் போதும், ஹிஸ்புல்லா தொடர்ந்து, இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் , இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொதுமக்கள் முன்னறிப்பின்றி வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்” என்று அமெரிக்க குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. அதேபோல் ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் லெபனானில் உள்ள ஜோர்டான் நாட்டு குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு வலியுறுத்தி இருக்கிறது
சமீப நாட்களில், ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு நெட்வொர்க், ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் ஆயுத சேமிப்புத் தளங்கள் மீது இஸ்ரேல் இலக்குத் தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில்,
தரைவழிப் படையெடுப்பையும் தொடங்கி முழு அளவிலான போரைத் தொடங்கலாம் என்ற அச்சம் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவுகிறது.