கலப்பட நெய் விவகாரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திரிபாதி தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலப்பட்டது தொடர்பான விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி சர்வ சிரேஷ்ட திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளது. 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர் திருப்பதிக்கு வந்த நிலையில், தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு விசாரணை அதிகாரி சர்வ சிரேஷ்ட திரிபாதி, திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
காவல் நிலையத்திலிருந்து வழக்கு தொடர்பான விவரங்களை பெற்றுக் கொண்டு பல்வேறு குழுக்களை அமைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து தேவஸ்தானம் கொள்முதல் செய்த நெய் பற்றியும் விசாரணை நடத்தவுள்ளதாக கூறினார்.