நாகையில் நடுக்கடலில் பைபர் படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அதில் 8 பைபர் படகு மீனவர்கள், கோடியக்கரை அருகே மீன்பிடி வலையை கடலில் செலுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளனர்.
அப்போது அவ்வழியே வந்த விசைப்படகு மீனவர்கள், வலையை அறுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பைபர் படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
அப்போது இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் செந்தில், வில்பிரட், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் மோதல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.