டெல்லியில் சாலைகளில் நிலைகள் குறித்து முதலமைச்சர் அதிஷி ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லியில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் அதிஷிக்கு கடிதம் எழுதிருந்தார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் அதிஷி அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். மேலும், சாலைகளின் நிலைமையை மதிப்பிட்ட பிறகு, பழுதுபார்க்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், டெல்லி ஓக்லா தொழிற்பேட்டையில் உள்ள சாலைகளின் நிலைமை குறித்து முதலமைச்சர் அதிஷி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், தீபாவளி பண்டிகைக்குள் டெல்லி மக்களுக்கு பள்ளம் இல்லாத சாலைகளை வழங்க முயற்சிப்போம் என முதலமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.
இதேபோன்று, பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ மணீஷ் சிசோடியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.