தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்…!
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த செந்தில்பாலாஜி, சேலம் ராஜேந்திரன், கோவி.செழியன், ஆவடி நாசர் ஆகியோரை அமைச்சர்களாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதே நேரத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
அண்மைக்காலமாக உதயநிதி துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் பரவிய நிலையில், செந்தில் பாலாஜியின் வருகைக்காக அமைச்சரவை மாற்றத்தை தள்ளி வைத்திருந்தது இந்த அறிவிப்பு உறுதிபடுத்தியுள்ளது.
சரிவை சந்தித்துவரும் கொங்கு மண்டலத்தை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவை வழங்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், ஒன்றைரை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளிவரும் செந்தில் பாலாஜிக்கு உடனே அமைச்சர் பதவி வழங்கிய தலைமையின் முடிவு கட்சி நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரோடு அரசு கொறடாவாகவும் உதயநிதியின் தீவிர விசுவாசியுமான கோவி செழியனுக்கும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகிய இரண்டு மாவட்டச் செயலாளர்களின் தொடர் அழுத்தமே மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செஞ்சி மஸ்தானின் குடும்ப ஆதிக்கமே அவரின் பதவியை பறிக்கும் அளவிற்கான சூழலை உண்டாக்கியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அமைச்சர் இல்லாத நிலையில், அதற்காக மட்டுமே சேலம் ராஜேந்திரனை அமைச்சராக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர அமைச்சர்கள் சிலருக்கு தங்கள் வசமிருந்த இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மூத்த அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதாவது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் துரைமுருகன், கே.என்.நேருவுக்கு அடுத்த இடத்திலிருந்த பொன்முடி, முப்பதாவது இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.
பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் விதம், துறை ரீதியான செயல்பாடுகளில் மந்தம், அதிகாரப் போக்கு, ஆளுநரிடையே தொடர் மோதல் போக்கு ஆகியவையே அவரது துறை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டாலும், அண்மையில் தான் அவரின் மகன் கவுதம் சிகாமணிக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறையை மீண்டும் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், தங்கம் தென்னரசுவை சமாளிக்க அவருக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி தொடர் சர்ச்சைக்குள்ளாகி வரும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, சர்ச்சைகள் மற்றும் முறைகேடுகளின் புகழிடமாக திகழும் பால்வளத்துறையை ஒதுக்கியிருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜை, டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசு நிர்வாக சீர்திருத்தப் பணிகள் தொடர்பான துறைக்கு அமைச்சராக நியமித்திருப்பது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அதிகாரங்கள் உதயநிதிக்கு வழங்கப்படுவது வாரிசு அரசியலின் உச்சம் எனவும், ஜனாநாயக விரோதம் எனவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கருணாநிதி, தன் மகனை எப்படி துணை முதலமைச்சராக்கி அழகு பார்த்ததாரோ, அதைப் போலவே முதலமைச்சர் ஸ்டாலினும் தன் மகனை துணை முதலமைச்சராக்கி அழகுபார்ப்பது, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தொடங்கி மூத்த தலைவர்கள் வரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.