ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை ஒட்டு மொத்தமாக தரைமட்டமாக்க, தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியிருக்கிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதல்களை ஈரானும், ஹிஸ்புல்லாவும் எப்படி எதிர்கொள்ள போகின்றன ? மத்திய கிழக்கில் முழு போர் மூளுமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
ஈரானுக்கு இது ஒரு சோதனை காலமாகும். நீண்ட காலமாகவே, ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தனது ஆதரவு போராளிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ,ஏமனில் ஹூதி தீவிரவாதிகள், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் மூலமாக மத்திய கிழக்கு முழுவதும், ஈரான் தான் அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி வந்தது.
கடந்த ஜூலை மாதம், ஈரான் தலைநகரில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எதிர்பாராத முறையில் கொல்லப்பட்டார். கடந்த வாரங்களில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில், ஈரானின் உயர்மட்ட தளபதிகள் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப் பட்டார்.
ஹிஸ்புல்லாவின் தலைமையகம் உட்பட ஏவுகணைகள், ராக்கெட்டுகள் இருந்த ஆயுத சேமிப்பு கிடங்குகள் இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கப்பட்டன. இவை எல்லாம் ஈரானின் உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் பலவீனத்தை வெளிக்காட்டின.
இந்நிலையில், தீவிரவாதத்துக்குத் துணை போகும் ஈரானுக்கு, இஸ்ரேல் நேரடியாக சவால் விட்டிருக்கிறது. கடந்த திங்கள் கிழமை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாரசீக மக்களுக்கு, கொடுங்கோலர்களின் ஆட்சியிலிருந்து விடுபட்டு மக்கள் இஸ்ரேலுடன் சமாதானம் செய்யக்கூடிய நல்ல நாள் விரைவில் வரும் என்று உறுதியளித்திருந்தார். மேலும் இஸ்ரேல் தொட முடியாத இலக்கு ,மத்திய கிழக்கில் எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, இஸ்ரேலில் இருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், ஏமனின் ஹெளதி கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இஸ்ரேல் விமானப் படை துல்லியமாக தாக்கி அழித்தது குறிப்பிடத் தக்கது.
ஆபரேஷன் நார்தன் ஏரோஸ் (OPERATION NORTHERN ARROWS ) என்று பெயரில், இஸ்ரேல் இராணுவம், தெற்கு லெபனான் பகுதிகளில் தரை வழி தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. வடக்கு பகுதிகளில் வாழும் இஸ்ரேல் மக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை நீக்கவே இந்த தரைவழி தாக்குதல் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 95 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
G7 கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைவராக உள்ள இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இஸ்ரேல் -லெபனான் எல்லையில் அமைதி வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும், ஹிஸ்புல்லா தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப, நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தீவிர வாத குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சொந்த உரிமைக்கு ஏற்ப இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையே, லெபனானில் இருந்து பிரிட்டன் குடிமக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களை வெளியேற்ற வாடகை விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷ்யா தனது கடும் கண்டணத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில், ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அரபு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், மேலும், மேற்கு நாடுகளுடன் ஈரானின் அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மொசாட் தலைவர் தமிர் பார்டோ உள்ளிட்ட பல முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள், மத்திய கிழக்கை மீண்டும் வரையறை செய்வதற்கு, இந்த ராணுவ நடவடிக்கைகள் அவசியம் என்று பகிரங்கமாக வலியுறுத்துகின்றனர். கடந்த 12 நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் கொடுத்த அதிரடிகள், இஸ்ரேலுக்கு, நழுவ விடக்கூடாத ஒரு வாய்ப்பை அளித்துள்ளன என்றும் கூறுகின்றனர்.
2006ம் ஆண்டு நடந்த போர் போலவே இன்னொரு போருக்கு இஸ்ரேல் தயாராகி இருப்பதாகவே தெரிய வருகிறது. எப்படி ஆனாலும், இந்தப் போரின் இறுதிக் கட்டம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் என்று ராணுவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.